தேவை... ரயிலில் போதிய மருத்துவ வசதி...

புதன், டிசம்பர் 29, 2010

                                                           
                 இது நடந்தது 2007 பிப்ரவரியில். நானும் என் 
அப்பாவும் எனது ஊரிலிருந்து சென்னைக்குச் சென்று 
கொண்டிருந்தோம். பின் அங்கிருந்து நான் ஹைதராபாத்தில் 
ஒரு இன்டர்வியூவுக்குச் செல்வதாக இருந்தது. எனக்கு சிறு 
வயதிலிருந்தே வீசிங் தொல்லை உண்டு. அன்றும் அந்த 
தொல்லையால் ஊரிலேயே டாக்டரிடம் காண்பித்துவிட்டு 
இன்டர்வியூ கண்டிப்பாக அட்டென்ட் பண்ண வேண்டுமென 
அன்றிரவே சென்னைக்குச் சென்று கொண்டிருந்தோம். 
நள்ளிரவில் திடீரென எனக்கு வீசிங் அதிகமாகியது. மற்ற 
பயணிகள் அனைவரும் தூங்கிக் கொண்டிருந்தனர். அப்பாவுக்கு 
என்ன செய்வதென்று தெரியவில்லை. கடுமையான மூச்சுத் 
திணறலுடன் இருந்த என்னைத் தனியாக விட்டுப் போக 
மனமின்றி, ரயிலில் உள்ள டாக்டரை ஒவ்வொரு பெட்டியாகத்
தேடிப் போனார். ரயிலில் டாக்டர் இல்லை. 
               பின் வண்டி ஏதோ ஒரு ஸ்டேஷனில் நின்றது. அப்பா 
அந்த ஸ்டேஷனில் இறங்கி ரயில்வே டாக்டரை அழைத்து வர 
ஓடினார். அங்கும் எவரும் இல்லை. ஸ்டேஷனில் அனைவரும் 
உறங்கிக் கொண்டிருந்தனர். ரயிலும் கிளம்பி விட்டது. எனவே 
அப்பா வண்டியில் ஏறி விட்டார். ஒரு வழியாக உயிரைக் 
கையில் பிடித்துக்கொண்டு சென்னை வந்து சேர்ந்தேன். பின்னர் 
சித்தப்பாவின் உதவியால் அங்கு மருத்துவமனையில் சிகிச்சை 
எடுத்துவிட்டு அன்றிரவே ஹைதராபாத் இன்டர்வியூவுக்குச் 
சென்றேன். என்னால் அந்த இரவுப் பயணத்தை முழுவதுமாக 
மறக்க முடியவில்லை.
               என் நிலைமை வயதானவர்களுக்கு நடந்திருந்தால் 
எவ்வளவு கஷ்டமாக இருந்திருக்கும் என்பதை நினைத்துக் கூட 
பார்க்க முடியவில்லை. சில நாட்கள் கழித்து , நடிகரும் ,செய்தி
வாசிப்பாளருமான திரு. வரதராஜன் அவர்களின் பேட்டியை ஒரு 
பத்திரிகையில்  படித்தேன். கிட்டத்தட்ட இதே நிலையில், 
ரயிலில் போதிய மருத்துவ வசதி இல்லாமல், அவரது 
மனைவியை இழந்ததை அறிந்தேன். மிகவும் வருத்தமாக 
இருந்தது.
             இது நடந்து கிட்டத்தட்ட நான்கு வருடங்கள் ஆகப் 
போகிறது. இதை ஏன் இப்போது சொல்கிறேன் என்றால்,
போன மாதம் கூட, என் அப்பா சென்னைக்கு சென்று 
கொண்டிருக்கும் போது இதே போல,ரயிலில் நெஞ்சு 
வலியால் கஷ்டப்பட்டிருக்கிறார். அப்போதும் ரயிலில்
மருத்துவர் யாரும் இல்லை. நாம் தேடும்போது, டிக்கட் 
பரிசோதகர் கூட இருப்பதில்லை. சிறிது நேரத்தில், வலி 
தானாகவே சரியானதால் பெரிதாகப் பிரச்சனை இல்லை 
அப்பாவுக்கு. இதே ஹார்ட் அட்டாக் போல, பெரியதாக 
ஏதும் இருந்திருந்தால் , நினைத்துக் கூடப் பார்க்க 
முடியவில்லை.
              ரயிலில் ஒவ்வொரு பெட்டிக்கும் ஒரு டிக்கட் 
பரிசோதகர் இருக்கிறார். சில நேரங்களில்தான் அவர்கள் 
அந்தப் பெட்டியிலேயே தங்குகின்றனர். இந்த நிலை மாறி, 
அவர்கள் கண்டிப்பாக பெட்டியில்தான் இருக்க வேண்டும்.
அதே போல சில பெட்டிகளில்தான் போலீசும் இருக்கின்றனர்.
ஒவ்வொரு பெட்டியிலும் இருந்தால் தானே மக்கள் 
பாதுகாப்புடன் பயணிக்க முடியும்? கண்டிப்பாக ஒவ்வொரு 
பெட்டிக்கும் ஒரு மருத்துவரும், ஒரு முதலுதவிப்
பெட்டியும் அவசியம் தேவை.
            முன்பெல்லாம் ரயில் டிக்கெட் எடுக்கும்போதே  
டிக்கெட் எடுக்கும் பார்மில், மருத்துவராக இருந்தால்,
மருத்துவர் என்று குறிப்பிட வேண்டும். அப்படியாவது,
ரயிலில் ஒன்றிரண்டு மருத்துவர்கள், ஏதாவது ஒரு 
பெட்டியிலாவது இருந்தனர். இப்போது அதுவும் இல்லை.   
               வருடா வருடம் ரயில்வே பட்ஜெட்டில் பல புதிய 
திட்டங்கள் அறிமுகமாகின்றன; வசதிகள் 
மேம்படுத்தப்படுகின்றன. ஆனால் இன்றும் ரயில்களில் 
போதிய மருத்துவ வசதிகள் இல்லை.  கால் ஊனமுற்றவர்கள் 
மிகவும் கஷ்டப்பட்டுதான் இன்னமும் ரயிலில் ஏறுகிறார்கள். 
என்று மாறும் இந்த நிலை?

ஸ்ரீவில்லிபுத்தூர்-ஆண்டாள் திருத்தேர்

சனி, டிசம்பர் 25, 2010


              தமிழக அரசின் சின்னமாக இருக்கும் ஸ்ரீவில்லிபுத்தூர்
ஆண்டாள் கோயில் குறித்து அறிந்தவர்களுக்கு,
தமிழகத்திலேயே திருவாரூர் தேரை அடுத்து, இரண்டாவது
பெரிய தேர் இக்கோயிலுக்கு சொந்தமானது என்ற விவரம்
நிச்சயம் ஆச்சரியத்தைத் தரும்.
              இத்தேர் பல நூறு ஆண்டுகளுக்கு முன், நாங்குநேரி
மடம் பரமஹம்ச பட்டர் பிரான் ராமானுஜ ஜீயர் சுவாமிகளால்
உபயமாக வழங்கப்பட்டது. தேர் முழுவதும் தேக்கு, கோங்கு
போன்ற உயர்ரக மரங்களால் செய்யப்பட்டது என்பதால்
இன்றளவும் உறுதியாக இருக்கிறது.
            இதன் விசேஷம் என்னவென்றால், ராமாயண, மகாபாரத
கதைகளைக் குறிக்கும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிற்பங்கள் வடியவமைக்கப்பட்டுள்ளன. சுமார் 1,500 டன் எடையும், 112அடி
உயரமும் கொண்ட இத்தேரின் சக்கரம் முன்பு மரத்தால்
செய்யப்பட்டு இருந்தது. இதனால் தேரை நிலைக்குக் கொண்டு
வர பல மாதங்களாகும். தேரை இழுப்பதற்கு பக்கத்து ஊர்களில்
இருந்து எல்லாம் ஆட்களைத் திரட்டிக் கொண்டு வருவார்கள்.
இந்தத்தேரின் உச்சியில் இருக்கும் கொடி, பக்கத்து
ஊர்களிலிருந்து பார்ப்பவர்களுக்கும் தெரியுமாம்.
              திருச்சி 'பெல்' நிறுவனம் 1986ல் இரும்பு சக்கரங்களைப்
பொருத்தியது. இதன் பிறகு, புல்டோசரின் உதவியாலும் முன்று
மணி நேரத்தில் தேர் நிலைக்குக் கொண்டு வரப்படுகிறது. மேலும்
சிகப்பு நிறத் துணியால் ஆன அடுக்குகளும் குறைந்து இப்போது
மூன்று அடுக்குகளே உள்ளன.
               இவ்வாறு பல பெருமைகளை உடைய ஸ்ரீவில்லிபுத்தூர்
ஆண்டாள் கோயிலின் தேர், ஆண்டுதோறும் ஆகஸ்டு மாதம்,
ஆடிப்பூரத்தன்று இழுக்கப்படுகிறது.

ஸ்ரீவில்லிபுத்தூர் - வரலாறு

வியாழன், டிசம்பர் 23, 2010

             
              எனது ஊரான  ஸ்ரீவில்லிபுத்தூர், வில்லி என்ற மன்னன்
ஆண்டதால் வில்லிபுத்தூர் என்றும், ஆண்டாள் பிறந்த
ஊராதலால், 'ஸ்ரீ' என்னும் திருநாமத்தோடு ஸ்ரீவில்லிபுத்தூர்
என்றும் அழைக்கப்படுவதாக, பள்ளி நாட்களில் படித்திருக்கிறேன்.
ஆனால் எனக்குத் தெரியாத விஷயங்களை சமீபத்தில் நாளிதழில்
படித்தேன்.
            மதுரையைக் கைப்பற்றிய கான்சாகிப் என்ற மருதநாயகம்,
ஆங்கிலேயருக்கு வரி கொடுக்க மறுத்த 'நெற்கட்டுச் செவ்வல்'
பாளையக்காரர் பூலித்தேவரை வெல்ல, ஸ்ரீவில்லிபுத்தூரில்
முகாமிட்டார். 1756 மே 6 -ல் நடந்த போரில் அவரை வெல்ல
இயலாமல், ஸ்ரீவில்லிபுத்தூர் கோட்டையைக் கைப்பற்றினார்.
பின், அதை தரைமட்டமாக்கினார். இப்போது எந்தத் தடயமும்
இல்லாத அந்த இடம் 'கோட்டைத்தலைவாசல்'
என்றழைக்கப்படுகிறது. (அந்த இடம் முழுவதும் இப்போது
வீடுகளாகி, கோட்டைத்தலைவாசல் தெருவாக மாறிவிட்டது.
இந்தத் தெருவில்தான் நாங்கள் 18 வருடங்கள் இருந்தோம். எனது
பள்ளி வாழ்க்கை முழுவதும் இங்குதான் கழிந்தது. ஆனால் அந்தத்
தெருவிற்கான வரலாறு இப்போதுதான் தெரிந்தது.)
              மதுரைக்கும் நெல்லைக்கும் நடுவில் ஸ்ரீவில்லிபுத்தூர்
கோட்டை இருந்ததால், ஆங்கிலேயர் ஆட்சியில் 'நடுமண்டலம்'
என்றழைக்கப்பட்டது. ஆங்கிலேயரின் ராணுவ தளவாடமாகவும்
இருந்தது.
              ஸ்ரீவில்லிபுத்தூர் பெயர் காரணத்திற்கு புராணங்கள்
உண்டு. சாபத்திற்கு ஆளான வில்லி, கந்தன் என்ற இரு
முனிவர்கள், வேடர்களாக பிறந்து வளர்ந்தனர். ஒருநாள்
கந்தனை புலி அடித்துக் கொன்றது. சகோதரரைத் தேடி வில்லி
அலைந்தார். அன்றிரவு அவரது கனவில் கந்தன் தோன்றி, தான்
இறந்த செய்தியைத் தெரிவித்தார்.பின், கந்தன் இறந்த இடத்தை
சுத்தம் செய்து ஒரு நகரமாக மாற்றியதுதான், ஸ்ரீவில்லிபுத்தூர்
என்கின்றனர்.
              ஆண்டாள் கோயில் கி.பி. 788ல் கட்டப்பட்டது. இங்குள்ள
நரசிம்மர் சன்னதி, கல்வெட்டுகளில் ஒன்றான, சோழனின்
தலைகொண்ட வீரபாண்டியன் (கி.பி.946 -966 ) கல்வெட்டில்,
இக்கோயில் 'ஜலசயநாட்டுக் கிடந்தருளின பரமசுவாமி கோயில்'
என்றழைக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
             சோழமன்னன் முதலாம் குலோத்துங்கன் (கி.பி.1070 -
1120 ) ஆட்சியில் இந்த ஊர், 'விக்கிரமசோழ சதுர்வேதி
மங்கலம்' என்றழைக்கப்பட்டது. பிற்கால பாண்டியர்
கல்வெட்டில், இக்கோயில் வடபெருங்கோயில் பள்ளி
கொண்டருளிய பெருமாள் கோயிலாக இருந்தது. பின்,
கி.பி.13 ம் நூற்றாண்டில் இந்த ஊர், 'பிரம்மதேய குலசேகர
சதுர்வேதி மங்கலம்' என்ற பெரிய நகரமாக பிற்கால
பாண்டியர்களால் விரிவுபடுத்தப்பட்டது. கோயிலைச் சுற்றி
கோட்டைச்சுவர் கட்ட ஸ்ரீவல்லபபாண்டியன் பொற்கிழி வழங்கி
உள்ளார்.
            புனர்வேலி என்ற ஊரைச் சேர்ந்த சங்கரன்முறி அருளக்கி
என்பவர் பாராங்குசபுத்தூர் குளத்தை சீர்படுத்தி,  வடக்குப் பகுதி
மதகை புதுப்பித்ததாக இங்கு ஆய்வு செய்த தொல்லியல்
நிபுணர்கள் கண்டுபிடித்து உள்ளனர். இந்த மதகை இப்போதும்
ஸ்ரீவில்லிபுத்தூர் குளத்தில் காணலாம்.
             ஆண்டாள் கோயில் பல காலகட்டங்களில், பலரால்
புதுப்பிக்கப்பட்டு, விரிவுபடுத்தப்பட்டது. மதுரையை ஆண்ட
திருமலைநாயக்கர், குற்றாலத்திற்கு செல்லும் வழியில், இங்கு
தங்குவதற்கு ஒரு மாளிகை கட்டினார். பின்னர் அந்தக்கட்டடம்
கோர்ட் அலுவலமாக இருந்தது. தற்போது அதை நினைவுச்
சின்னமாக்க முயன்று வருகின்றனர்.



             இக்கோயிலின் சிறப்பம்சமான 192 அடி உயர
ராஜகோபுரம் கி.பி.17ம் நூற்றாண்டில் நிறுவப்பட்டது. தமிழக
அரசின் முத்திரை சின்னமாக இருப்பதும் இக்கோபுரம்தான்.
புராணம், வரலாறுகளைத் தாங்கி நிற்கும் ஸ்ரீவில்லிபுத்தூர்,
தமிழகத்தின் கிரீடத்தில் வைரமாக ஜொலிக்கிறது.

சிறுவயது மழைக்காலம்

திங்கள், டிசம்பர் 20, 2010



             
               எல்லா ஊர்களிலும் பரவலாக மழைபெய்து
இப்போதுதான் ஓய்ந்திருக்கிறது. எங்கு பார்த்தாலும் தண்ணீர்!
சின்னவயதில், இதுபோல மழையையும், தண்ணீரையும்
பார்க்கும்போது ஒரே குதூகலமாக இருக்கும்.
   
            சைக்கிளில் அப்பாவுடன் போகும் போது,  மழைநீரால்
தண்ணீர் தேங்கிக் கிடக்கும் இடங்களில், பள்ளம் என்று
தெரியாமல், ' தண்ணிக்குள்ள சைக்கிளை ஓட்டுங்கப்பா' என்று
ஒவ்வொரு தண்ணீர் தேங்கி நிற்கும் இடத்தைப் பார்த்தும்
சொல்லுவேன். உடனே அப்பா, 'அது பள்ளம். சைக்கிளை அதுல
விட்டால் விழுந்துடுவோம்' என சொல்வாங்க. அப்பா என்னை
ஏமாற்றுவதற்காக அப்படி சொல்கிறார்கள் என்று நினைத்து நான்
அழுவேன். அதுதான் நிஜம் என்று அப்போது தெரியாது.
அப்புறமாக நான் சைக்கிளில் போகும்நாட்களில்,  இதுபோல
ஆசைப்பட்டு தண்ணீர் தேங்கி நிற்கும் பள்ளத்தில் சைக்கிளை
ஓட்டி, கீழே விழுந்த பிறகுதான் தெரிய வந்தது.

             மழை நாட்களில் ஸ்கூலுக்கு குடை எடுத்துச் செல்வதும்,
மழைபெய்தால் குடைபிடித்துக் கொண்டு வருவதும் அவ்வளவு
ஆனந்தமாக இருக்கும். பெரிய மழை பெய்தால், ஸ்கூல் லீவாக
இருக்கும். ஸ்கூல் லீவு என ஒருபக்கம் சந்தோஷமாக
இருந்தாலும்,  மழையில் குடைபிடித்துக் கொண்டு போக
முடியவில்லையே எனவும், அம்மாவுக்குத் தெரியாமல்,
குடையை விலக்கிவிட்டு மழையில் நனைவதும்,  மழை நீரில்
கால் நனைத்துக் கொண்டு நடப்பதும் முடியவில்லையே எனவும்
வருத்தமாக இருக்கும்.

               அப்படி ஸ்கூல் லீவு என வீட்டில் இருக்கும்
போதெல்லாம், அம்மா எங்காவது வெளியில் கடைக்குப் போகச்
சொல்லமாட்டார்களா, விளையாட செல்லமாட்டோமா என்று
இருக்கும். மழை விட்டபிறகும் சாலையில் போகும் தண்ணீரில்
நடக்கப் பிடிக்கும். ஆனால் அதற்கும் கூட, கழிவுநீர் என
அனுமதிக்க மாட்டார்கள். எனவே, வீட்டிலேயே
ஜன்னலோரத்தில் உட்கார்ந்து, வேடிக்கைப் பார்த்துக்கொண்டு
இருப்பேன். அதுவும் ஒருவகையில் சந்தோஷமாகத்தான்
இருக்கும். அந்த வயதில், மழையை ரசிக்கத் தெரியாது. ஆனால்,
மழையைப் பார்க்க, நனைய பிடித்திருந்தது. இப்போது
அதேபோல, ஒரு மழைநாளில், வீட்டினுள் இருந்து மழையைப்
பார்த்துக்கொண்டிருக்கும் போது, இந்த ஞாபகங்கள் எல்லாம்
வந்தது. 'இப்படியெல்லாம் சின்னவயதில் அற்பமாக
ஆசைப்பட்டிருக்கிறோமே?' என்று நினைத்து சிரிப்புதான் வந்தது.


காதல்...

ஞாயிறு, டிசம்பர் 12, 2010


                எனக்கு மெயிலில் வந்த கதை இது.  ஒரு
ரெஸ்ட்டாரண்ட்டில் தன் எதிரில் வந்து அமர்ந்தவளின்
அழகில் மயங்கினான் அவன்.இதயம் துடிக்க,
கைகால்கள் படபடக்க.. உணர்ச்சிமயமாக இருந்தவனுக்கு..
பேச்சும் வரவில்லை.சர்வரை அழைத்து, 'காபிக்கு
கொஞ்சம் சர்க்கரை கொண்டு வா' என்று சொல்ல
நினைத்தவன், நாக்கு குழறி, " காபிக்கு கொஞ்சம் உப்பு
கொண்டு வா'  என்றான். சர்வர் இதைக் கேட்டு
திகைத்தார்.

              வார்த்தை தவறியது மறுவிநாடியே அவனுக்குப்
புரிந்துவிட்டது என்றாலும் அழகியின் எதிரில் தன் இமேஜைக்
காப்பாற்றிக்கொள்ள, 'ஆமா.. உப்புதான் கேட்டேன். கொண்டு
வா!" என்றான் சர்வரிடம். அழகிக்கு ஆச்சரியம். " காபியில்
உப்பு போட்டு சாப்பிடுவதா?" என்று விசாரித்தாள். அவனோ,
உடனடியாக கதை ஒன்றை அவிழ்த்துவிட்டான்.

            "கடலோர மீனவ கிராமம் ஒன்றில் பிறந்தவன் நான்.
இப்ப நகரத்துல வசதியா இருந்தாலும் அப்பாவும் அம்மாவும்
அந்தக் கிராமத்தை விட்டு வரமாட்டேங்கறாங்க. அவங்க
நினைப்பும், ஊரு நினைப்பும் என்னைவிட்டுப் போயிடக்
கூடாதுங்கிறதால, காபியில உப்பு போட்டுக்கறேன்!" என்றான்.
அவனது பெற்றோர் பாசமும், ஊர் பற்றுதலும் அவளை ஈர்த்தது.
அடுத்தடுத்து அவளே வந்து வலிய சந்தித்ததில் காதல் வளர்ந்து,
கல்யாணமும் முடிந்தது.

            நாற்பது ஆண்டு கால குடும்பவாழ்க்கைக்குப் பிறகு,
ஒருநாள் அவன் இறந்துவிட, அவனது பெட்டியில் ஒரு
கடிதத்தைக் கண்டாள் அவள்."ஸாரி டார்லிங்! ஒரு பொய்
சொல்லிட்டேன். நமது முதல் சந்திப்பின் போது, காபிக்கு
நான் உப்பு கேட்டது என் உளறல். சொன்ன சொல்லைக்
காப்பாற்ற வாழ்க்கை முழுக்க நான் காபியில் உப்பு
சேர்த்துக்கொண்டாலும்..அன்று சொன்ன பொய் என்னை
நெருடுகிறது...!"

பின் குறிப்பு : "நீ மட்டும் கிடைப்பதாக இருந்தால் அடுத்த
ஜென்மத்திலும் உப்பு காபி சாப்பிட நான் தயார்!"

            வேறொரு நாள்... அவள் காபியில் உப்பு சேர்த்துக்
கொண்ட போது, " உப்புக் கரிக்கலையா?" என்று கேட்டார் ஒருவர்.
"இனிப்பாக இருக்கிறது!" என்றாள் அவள்.

இவ்வாறாக முடிகிறது கதை. சுவை என்பது நாக்கில்
மட்டுமல்ல... மனதிலும் இருக்கிறது என்பதுதான் இந்தக்
கதையின் நீதியாக சொல்லப்பட்டிருக்கிறது.
இப்படியும் காதல் வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறது....

நாகர்கோவில் -IV

ஞாயிறு, டிசம்பர் 05, 2010

மண்டைக்காடு



               அடுத்து மண்டைக்காடு கோவிலுக்கு நாங்கள்
செல்லும்போது மழை பெய்யத்தொடங்கியது. நல்ல
வேளையாக கோவிலை அடையும்போது மழைவிட்டு
விட்டது. மண்டைக்காடு, நாகர்கோவிலில் இருந்து 22கி.மீ
தொலைவில் உள்ளது. இந்தக் கோவில் கி.பி.7ஆம்
நூற்றாண்டில் கட்டப்பட்டிருக்கிறது. இங்கு 12அடி உயரமும்,
ஐந்து கரங்களும் உடைய பகவதி அம்மன் சிலை உள்ளது.
இச்சிலை மேலும் மேலும் வளருவதாக நம்பப்படுகிறது.
மண்டைக்காடு கோவில் பெண்களின் சபரிமலை எனவும்
அழைக்கப்படுகிறது. இந்தக் கோவிலுக்கு கேரளாவிலிருந்தும்
மக்கள் பலர் வருகின்றனர். ஒவ்வொரு வருடமும் மார்ச்
மாதம், கேரளாவில் உள்ள ஆற்றிங்கால் பகவதி அம்மன்
கோவில் பொங்கல் திருவிழா முடிவடைந்ததும், இங்கு
பொங்கல் திருவிழா 10 நாட்கள் கொண்டாடப்படுகிறது.
அப்போது லட்சக்கணக்கான மக்கள் இங்கு வருகின்றனர்.
இந்தக் கோவில் கடற்புரத்தில் அமைந்துள்ளது. நாங்கள்
கோவிலுக்குப் போனபோது இருட்டிவிட்டதால் கடற்கரைக்குச்
செல்ல முடியவில்லை. மற்ற இடங்களை விட இங்கு கடலில்,
அலைகளின் சீற்றம் மிக அதிகமாக இருக்குமாம்.

வெள்ளிமலை





             கடைசியாக நாங்கள் சென்றது வெள்ளிமலை. இது
நாகர்கோவிலிலிருந்து 7கிமீ தொலைவில் உள்ளது. இந்த 200அடி
உயர வெள்ளிமலையின் உச்சியில்  'பாலசுப்பிரமணிய சுவாமி'
திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த மலையின் உச்சியில்
நந்திப்பாதமும், முருகப்பாதமும் இருப்பதாக நம்பப்படுகிறது.
ஆனால் நாங்கள் அதை பார்க்கவில்லை. மேலும் இந்த மலையின்
உச்சியிலிருந்து  பார்த்தால், வடக்குப்பக்கம் பச்சைப்பசேலென
மரங்களும், தெற்குப்பக்கம் கடலும் கண்கொள்ளாக் காட்சியாக
இருக்கும். முருகனின் விசேஷ நாட்களான கந்த சஷ்டி, வைகாசி
விசாகம், தைப்பூசம் போன்ற எல்லா நாட்களும் இங்கு
விசேஷமாக உள்ளன. மேலும் ஒவ்வொரு தமிழ்மாதம் கடைசி
வெள்ளிக்கிழமை இங்கு சிறப்பாக உள்ளது. இந்தக் கோவிலிலும்
பிரசாதமாக கஞ்சி கொடுக்கப்படுகிறது.

இந்தமுறை, இதனுடன் நாகர்கோவில் பயணம் முடிந்தது.
அடுத்தமுறை வேறு சில இடங்களுக்குச் சென்று அவற்றைப்
பற்றி எழுதுகிறேன்.
Related Posts with Thumbnails