அசோகா அல்வா

செவ்வாய், அக்டோபர் 25, 2011

நாளைக்கு தீபாவளி. எல்லாரும் அநேகமா புது ட்ரஸ், பட்டாசுகள் 
வாங்கி இருப்போம். இப்போது ஸ்வீட்ஸ் எல்லாம்
கடைகளிலேயே வாங்க ஆரம்பித்து விட்டோம். நேரமின்மையே 
இதற்கு காரணம். சிலர் மட்டும்தான் சாஸ்திரத்திற்காக வீட்டில்
செய்கின்றனர்.

அதுபோல நேரம் இல்லாமல் செய்யமுடியாதவர்களுக்கும், 
புதிதாக செய்ய நினைப்பவர்களுக்குமான ரொம்ப ஈசியான 
அல்வா இது.

பாசிப்பருப்பில் செய்யும் இந்த அல்வா, தஞ்சாவூர் மாவட்டத்தில் 
ரொம்ப பேமஸ். இது மிகவும் சத்தானதும் கூட. ஆனால் 
அசோகா அல்வா என ஏன் பெயர்வந்தது எனத் தெரியவில்லை.


(படம் கூகிளில் இருந்து எடுத்தது. நன்றி:கூகிள். கேமரா 
பழுதடைந்திருப்பதால், செய்யும் போது என்னால் படம்
எடுக்க முடியவில்லை.)

செய்யத் தேவையான பொருட்கள்:
பாசிப் பருப்பு- 1 கப்
கோதுமை மாவு - 2 ஸ்பூன்
கலர் - ஒரு சிட்டிகை 
சீனி - 1 கப்
நெய் - 1 கப்

முதலில் பாசிப் பருப்பை நன்கு குழைய வேக வைத்து,
அதை நன்கு மசித்துக் கொள்ளவும். கோதுமை மாவை
சிறிது நெய்யில் சிவக்க வறுத்துக் கொள்ளவும். பின்
சீனியை அது மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி,
கொதிக்கவிடவும். சீனித் தண்ணீர் கொதித்து நுரையாக 
வரும்போது, மசித்த பருப்பையும், கோதுமை மாவையும் சிறிது 
நெய்விட்டு நன்கு கிளறவும்.இது போல சிறிது சிறிதாக நெய்யை
ஊற்றி கிளறவும். தேவையெனில், இப்போது கலர் சேர்த்துக் கொள்ளலாம்.பாத்திரத்தில் ஒட்டாமல் நன்கு சுருண்டு 
வரும்போது, சிறிது நெய்விட்டு இறக்கவும்.நெய்யில் வறுத்த
முந்திரி, கிஸ்மிஸ் பழங்களை மேலாகத் தூவவும்.
மிகவும் எளிமையாக செய்யக் கூடிய இந்த அல்வாவை உங்கள்
வீட்டிலும் இந்த தீபாவளிக்கு செய்து பாருங்கள்.

அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!!

பாலை அருந்துவது ஆரோக்கியமா?

திங்கள், அக்டோபர் 03, 2011


                 இது நான் சமீபத்தில் படித்த கட்டுரை. இதன் மூலம் பல புதிய விஷயங்களைத் தெரிந்து கொண்டேன்.

             பால் பற்றிய தவறான கருத்து நம்மில் அனைவருக்கும்
இருக்கிறது. பெரியவர்கள் பால் எடுத்துக்கொள்ளக் கூடாது. அது
சிறிய குழந்தைகளுக்குத்தான். வெள்ளைப் பொருட்கள் உடலுக்கு
நல்லதல்ல. அதில் பாலும் ஒன்று என்றும், இதுபோல் நிறைய
செய்திகளை நாம் படிக்கிறோம், கேட்கிறோம். இப்போது பால்
நமக்கு நல்லதா? கெட்டதா?  என்று அறியலாம்.




              


                பால் ஒரு முழுமையான உணவாக கருதப்படுகிறது.
பிறந்த குழந்தைகளுக்கு ஆறுமாதம் வரை கண்டிப்பாக
தாய்ப்பால்தான் கொடுக்க வேண்டும். அதன்பிறகு குழந்தைகளின்
6 மாதம் முதல் 100 வயது பெரியவர்கள் அனைவரும் பால்
அருந்துமாறு அறிவுறுத்தப்படுகிறது. பாலில் நல்ல தரமான புரதம், கொழுப்பு,சிறிய அளவில் மாவுச்சத்து, மக்னீசியம் போன்ற
பலவிதமான சத்துக்கள் உள்ளன. மற்ற பொருட்களில் இல்லாத
சில சத்துக்கள் பாலில் உள்ளதால் நாம் எல்லோரும்
500 மி.லி. அளவு பாலைக் கண்டிப்பாக தினசரி எடுத்துக்
கொள்ளலாம்.
              6%,3%,1.5% கொழுப்பு உள்ள பால் கிடைப்பதால்
நமக்குத் தேவையான கொழுப்பு அளவின்படி நாம் எடுத்துக்
கொள்ள வேண்டும். பாலில் தண்ணீர் சேர்க்க கூடாது. பாலில்
70% தண்ணீர் இருப்பதால் பாலில் தண்ணீர் கண்டிப்பாக சேர்க்க
வேண்டாம். கொழுப்பு குறைக்க வேண்டும் என்றால், கொழுப்பு
குறைவாக உள்ள பாலை பயன்படுத்தவேண்டுமே தவிர
தண்ணீர் ஊற்றிக் காய்ச்சக் கூடாது. ஆவின் பால் ஒரு சிறந்த
பதப்படுத்தப்பட்ட பால் என்று சொல்லப்படுகின்றது. 3%
கொழுப்பு உள்ள ஆவின் பாலை நாம் எல்லோரும்
பயன்படுத்தினால் போதுமானது.

   பால் அருந்துவதால் வரும் நன்மைகள்:

   எலும்பு சக்திக்கு:
               பால் பொருட்கள் சுண்ணாம்புச் சத்தினைக்
கொடுக்கின்றன. இச்சத்து எலும்பு வளர்ச்சிக்கு மிகவும் அவசியம்.
எலும்பு வளர்ச்சி குழந்தை மற்றும் இளம் பருவத்தில் அதிக
முக்கியத்துவம் வாய்ந்தது. எனவே, இளம்பருவத்தினர் பால்
மற்றும் பால் பொருட்களை எடுத்துக் கொள்வது மிக முக்கியமான
ஒன்று. கர்ப்பிணிப் பெண்கள் குறிப்பிட்ட அளவில் பால்
எடுக்கவேண்டும். ஏனெனில், குழந்தையின் எலும்பு வளர்ச்சிக்கு
அது மிக முக்கியமான ஒன்று. ஆப்டிமைசிங் போன் மாஸ் எனவே
இளம் பருவத்தினருக்கு எலும்பு முறிவு வராமால் குறைக்கின்றது.
அதே போன்று மாதவிடாய் நின்றுவிட்ட பெண்கள் கண்டிப்பாக
500 மி.லி. வரைக்கும் பால் கண்டிப்பாக எடுத்துக்கொள்ள வேண்டும்.

  பல்:
             பால் மற்றும் பால் பொருட்களில் உள்ள சுண்ணாம்பு சத்து
மற்றும் பிற சத்துக்கள் பற்களுக்கு நண்பன். அச்சத்துக்கள்
பற்களின் வளர்ச்சிக்கும், ஆரோக்கியத்திற்கும் மிகமிக
முக்கியமானது. இவை தவிர இரத்தக் கொதிப்பு
கட்டுப்பாட்டிற்கும், உடல் பருமன் குறைவதற்கும், இதய
நோயிற்கும், புற்றுநோய், நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கும்
பால் எடுத்துக் கொள்ளலாம் என்று ஆராய்ச்சி முடிவில் தெரிய
வந்துள்ளது.

            பாலின் முக்கியத்துவம் பற்றி நாம் தெரிந்து கொண்டோம்.
பால் நம் தினசரி உணவில் ஒரு பங்காக இருக்க வேண்டும்.
பாலில் உள்ள சத்துக்கள், நன்மைகள் தெரிந்தபின் நாம், பால்
நமக்கு நல்லதல்ல என்று சொல்வது சரியா? அதிக அளவில்
கண்டிப்பாக எடுக்கக் கூடாது. சிலர் ஒரு லிட்டர் பாலை சுண்டக்
காய்ச்சி பயன்படுத்துவார்கள். முன்பே சொன்னது போல பாலை
சுண்டக் காய்ச்சி பயன்படுத்துவது தவறு. பாலை சூடு செய்து
அளவோடு எடுத்துக் கொள்வதுதான் சிறந்தமுறை ஆகும்.
பாலை குளிர்சாதனப் பெட்டியில் பல நாட்கள் வைத்து
நல்லதல்ல். அன்றைய தினப் பாலை அன்றைக்கே
பயன்படுத்துவது சிறந்தது. பால் வெகுவிரைவில் கெட்டுப்
போகக்கூடிய ஒரு உணவு. ஆகையால், பாலை அதிக நாட்கள்
குளிர்சாதனப் பெட்டியில் சேமித்து வைப்பது நல்லதல்ல.
இவ்வாறு பாலை சரியான முறையில் பயன்படுத்தி உடம்பை
நல்லமுறையில் பாதுகாக்க, பால் ஒரு சிறந்த முழு உணவாக கருதப்படுகின்றது. எனவே, பாலை தினசரி உணவில் அனைவரும் பயன்படுத்தி ஆரோக்கியமாக வாழ வேண்டுமென விரும்புகிறோம்.

          நான் தெரிந்து கொண்டது போல நீங்களும் பாலைப் பற்றி
பல புதிய விஷயங்களைத் தெரிந்து கொண்டீர்களா?


Related Posts with Thumbnails