எல்லா ஊர்களிலும் பரவலாக மழைபெய்து
இப்போதுதான் ஓய்ந்திருக்கிறது. எங்கு பார்த்தாலும் தண்ணீர்!
சின்னவயதில், இதுபோல மழையையும், தண்ணீரையும்
பார்க்கும்போது ஒரே குதூகலமாக இருக்கும்.
சைக்கிளில் அப்பாவுடன் போகும் போது, மழைநீரால்
தண்ணீர் தேங்கிக் கிடக்கும் இடங்களில், பள்ளம் என்று
தெரியாமல், ' தண்ணிக்குள்ள சைக்கிளை ஓட்டுங்கப்பா' என்று
ஒவ்வொரு தண்ணீர் தேங்கி நிற்கும் இடத்தைப் பார்த்தும்
சொல்லுவேன். உடனே அப்பா, 'அது பள்ளம். சைக்கிளை அதுல
விட்டால் விழுந்துடுவோம்' என சொல்வாங்க. அப்பா என்னை
ஏமாற்றுவதற்காக அப்படி சொல்கிறார்கள் என்று நினைத்து நான்
அழுவேன். அதுதான் நிஜம் என்று அப்போது தெரியாது.
அப்புறமாக நான் சைக்கிளில் போகும்நாட்களில், இதுபோல
ஆசைப்பட்டு தண்ணீர் தேங்கி நிற்கும் பள்ளத்தில் சைக்கிளை
ஓட்டி, கீழே விழுந்த பிறகுதான் தெரிய வந்தது.
மழை நாட்களில் ஸ்கூலுக்கு குடை எடுத்துச் செல்வதும்,
மழைபெய்தால் குடைபிடித்துக் கொண்டு வருவதும் அவ்வளவு
ஆனந்தமாக இருக்கும். பெரிய மழை பெய்தால், ஸ்கூல் லீவாக
இருக்கும். ஸ்கூல் லீவு என ஒருபக்கம் சந்தோஷமாக
இருந்தாலும், மழையில் குடைபிடித்துக் கொண்டு போக
முடியவில்லையே எனவும், அம்மாவுக்குத் தெரியாமல்,
குடையை விலக்கிவிட்டு மழையில் நனைவதும், மழை நீரில்
கால் நனைத்துக் கொண்டு நடப்பதும் முடியவில்லையே எனவும்
வருத்தமாக இருக்கும்.
அப்படி ஸ்கூல் லீவு என வீட்டில் இருக்கும்
போதெல்லாம், அம்மா எங்காவது வெளியில் கடைக்குப் போகச்
சொல்லமாட்டார்களா, விளையாட செல்லமாட்டோமா என்று
இருக்கும். மழை விட்டபிறகும் சாலையில் போகும் தண்ணீரில்
நடக்கப் பிடிக்கும். ஆனால் அதற்கும் கூட, கழிவுநீர் என
அனுமதிக்க மாட்டார்கள். எனவே, வீட்டிலேயே
ஜன்னலோரத்தில் உட்கார்ந்து, வேடிக்கைப் பார்த்துக்கொண்டு
இருப்பேன். அதுவும் ஒருவகையில் சந்தோஷமாகத்தான்
இருக்கும். அந்த வயதில், மழையை ரசிக்கத் தெரியாது. ஆனால்,
மழையைப் பார்க்க, நனைய பிடித்திருந்தது. இப்போது
அதேபோல, ஒரு மழைநாளில், வீட்டினுள் இருந்து மழையைப்
பார்த்துக்கொண்டிருக்கும் போது, இந்த ஞாபகங்கள் எல்லாம்
வந்தது. 'இப்படியெல்லாம் சின்னவயதில் அற்பமாக
ஆசைப்பட்டிருக்கிறோமே?' என்று நினைத்து சிரிப்புதான் வந்தது.










