சிறுவயது மழைக்காலம்

திங்கள், டிசம்பர் 20, 2010



             
               எல்லா ஊர்களிலும் பரவலாக மழைபெய்து
இப்போதுதான் ஓய்ந்திருக்கிறது. எங்கு பார்த்தாலும் தண்ணீர்!
சின்னவயதில், இதுபோல மழையையும், தண்ணீரையும்
பார்க்கும்போது ஒரே குதூகலமாக இருக்கும்.
   
            சைக்கிளில் அப்பாவுடன் போகும் போது,  மழைநீரால்
தண்ணீர் தேங்கிக் கிடக்கும் இடங்களில், பள்ளம் என்று
தெரியாமல், ' தண்ணிக்குள்ள சைக்கிளை ஓட்டுங்கப்பா' என்று
ஒவ்வொரு தண்ணீர் தேங்கி நிற்கும் இடத்தைப் பார்த்தும்
சொல்லுவேன். உடனே அப்பா, 'அது பள்ளம். சைக்கிளை அதுல
விட்டால் விழுந்துடுவோம்' என சொல்வாங்க. அப்பா என்னை
ஏமாற்றுவதற்காக அப்படி சொல்கிறார்கள் என்று நினைத்து நான்
அழுவேன். அதுதான் நிஜம் என்று அப்போது தெரியாது.
அப்புறமாக நான் சைக்கிளில் போகும்நாட்களில்,  இதுபோல
ஆசைப்பட்டு தண்ணீர் தேங்கி நிற்கும் பள்ளத்தில் சைக்கிளை
ஓட்டி, கீழே விழுந்த பிறகுதான் தெரிய வந்தது.

             மழை நாட்களில் ஸ்கூலுக்கு குடை எடுத்துச் செல்வதும்,
மழைபெய்தால் குடைபிடித்துக் கொண்டு வருவதும் அவ்வளவு
ஆனந்தமாக இருக்கும். பெரிய மழை பெய்தால், ஸ்கூல் லீவாக
இருக்கும். ஸ்கூல் லீவு என ஒருபக்கம் சந்தோஷமாக
இருந்தாலும்,  மழையில் குடைபிடித்துக் கொண்டு போக
முடியவில்லையே எனவும், அம்மாவுக்குத் தெரியாமல்,
குடையை விலக்கிவிட்டு மழையில் நனைவதும்,  மழை நீரில்
கால் நனைத்துக் கொண்டு நடப்பதும் முடியவில்லையே எனவும்
வருத்தமாக இருக்கும்.

               அப்படி ஸ்கூல் லீவு என வீட்டில் இருக்கும்
போதெல்லாம், அம்மா எங்காவது வெளியில் கடைக்குப் போகச்
சொல்லமாட்டார்களா, விளையாட செல்லமாட்டோமா என்று
இருக்கும். மழை விட்டபிறகும் சாலையில் போகும் தண்ணீரில்
நடக்கப் பிடிக்கும். ஆனால் அதற்கும் கூட, கழிவுநீர் என
அனுமதிக்க மாட்டார்கள். எனவே, வீட்டிலேயே
ஜன்னலோரத்தில் உட்கார்ந்து, வேடிக்கைப் பார்த்துக்கொண்டு
இருப்பேன். அதுவும் ஒருவகையில் சந்தோஷமாகத்தான்
இருக்கும். அந்த வயதில், மழையை ரசிக்கத் தெரியாது. ஆனால்,
மழையைப் பார்க்க, நனைய பிடித்திருந்தது. இப்போது
அதேபோல, ஒரு மழைநாளில், வீட்டினுள் இருந்து மழையைப்
பார்த்துக்கொண்டிருக்கும் போது, இந்த ஞாபகங்கள் எல்லாம்
வந்தது. 'இப்படியெல்லாம் சின்னவயதில் அற்பமாக
ஆசைப்பட்டிருக்கிறோமே?' என்று நினைத்து சிரிப்புதான் வந்தது.


காதல்...

ஞாயிறு, டிசம்பர் 12, 2010


                எனக்கு மெயிலில் வந்த கதை இது.  ஒரு
ரெஸ்ட்டாரண்ட்டில் தன் எதிரில் வந்து அமர்ந்தவளின்
அழகில் மயங்கினான் அவன்.இதயம் துடிக்க,
கைகால்கள் படபடக்க.. உணர்ச்சிமயமாக இருந்தவனுக்கு..
பேச்சும் வரவில்லை.சர்வரை அழைத்து, 'காபிக்கு
கொஞ்சம் சர்க்கரை கொண்டு வா' என்று சொல்ல
நினைத்தவன், நாக்கு குழறி, " காபிக்கு கொஞ்சம் உப்பு
கொண்டு வா'  என்றான். சர்வர் இதைக் கேட்டு
திகைத்தார்.

              வார்த்தை தவறியது மறுவிநாடியே அவனுக்குப்
புரிந்துவிட்டது என்றாலும் அழகியின் எதிரில் தன் இமேஜைக்
காப்பாற்றிக்கொள்ள, 'ஆமா.. உப்புதான் கேட்டேன். கொண்டு
வா!" என்றான் சர்வரிடம். அழகிக்கு ஆச்சரியம். " காபியில்
உப்பு போட்டு சாப்பிடுவதா?" என்று விசாரித்தாள். அவனோ,
உடனடியாக கதை ஒன்றை அவிழ்த்துவிட்டான்.

            "கடலோர மீனவ கிராமம் ஒன்றில் பிறந்தவன் நான்.
இப்ப நகரத்துல வசதியா இருந்தாலும் அப்பாவும் அம்மாவும்
அந்தக் கிராமத்தை விட்டு வரமாட்டேங்கறாங்க. அவங்க
நினைப்பும், ஊரு நினைப்பும் என்னைவிட்டுப் போயிடக்
கூடாதுங்கிறதால, காபியில உப்பு போட்டுக்கறேன்!" என்றான்.
அவனது பெற்றோர் பாசமும், ஊர் பற்றுதலும் அவளை ஈர்த்தது.
அடுத்தடுத்து அவளே வந்து வலிய சந்தித்ததில் காதல் வளர்ந்து,
கல்யாணமும் முடிந்தது.

            நாற்பது ஆண்டு கால குடும்பவாழ்க்கைக்குப் பிறகு,
ஒருநாள் அவன் இறந்துவிட, அவனது பெட்டியில் ஒரு
கடிதத்தைக் கண்டாள் அவள்."ஸாரி டார்லிங்! ஒரு பொய்
சொல்லிட்டேன். நமது முதல் சந்திப்பின் போது, காபிக்கு
நான் உப்பு கேட்டது என் உளறல். சொன்ன சொல்லைக்
காப்பாற்ற வாழ்க்கை முழுக்க நான் காபியில் உப்பு
சேர்த்துக்கொண்டாலும்..அன்று சொன்ன பொய் என்னை
நெருடுகிறது...!"

பின் குறிப்பு : "நீ மட்டும் கிடைப்பதாக இருந்தால் அடுத்த
ஜென்மத்திலும் உப்பு காபி சாப்பிட நான் தயார்!"

            வேறொரு நாள்... அவள் காபியில் உப்பு சேர்த்துக்
கொண்ட போது, " உப்புக் கரிக்கலையா?" என்று கேட்டார் ஒருவர்.
"இனிப்பாக இருக்கிறது!" என்றாள் அவள்.

இவ்வாறாக முடிகிறது கதை. சுவை என்பது நாக்கில்
மட்டுமல்ல... மனதிலும் இருக்கிறது என்பதுதான் இந்தக்
கதையின் நீதியாக சொல்லப்பட்டிருக்கிறது.
இப்படியும் காதல் வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறது....

நாகர்கோவில் -IV

ஞாயிறு, டிசம்பர் 05, 2010

மண்டைக்காடு



               அடுத்து மண்டைக்காடு கோவிலுக்கு நாங்கள்
செல்லும்போது மழை பெய்யத்தொடங்கியது. நல்ல
வேளையாக கோவிலை அடையும்போது மழைவிட்டு
விட்டது. மண்டைக்காடு, நாகர்கோவிலில் இருந்து 22கி.மீ
தொலைவில் உள்ளது. இந்தக் கோவில் கி.பி.7ஆம்
நூற்றாண்டில் கட்டப்பட்டிருக்கிறது. இங்கு 12அடி உயரமும்,
ஐந்து கரங்களும் உடைய பகவதி அம்மன் சிலை உள்ளது.
இச்சிலை மேலும் மேலும் வளருவதாக நம்பப்படுகிறது.
மண்டைக்காடு கோவில் பெண்களின் சபரிமலை எனவும்
அழைக்கப்படுகிறது. இந்தக் கோவிலுக்கு கேரளாவிலிருந்தும்
மக்கள் பலர் வருகின்றனர். ஒவ்வொரு வருடமும் மார்ச்
மாதம், கேரளாவில் உள்ள ஆற்றிங்கால் பகவதி அம்மன்
கோவில் பொங்கல் திருவிழா முடிவடைந்ததும், இங்கு
பொங்கல் திருவிழா 10 நாட்கள் கொண்டாடப்படுகிறது.
அப்போது லட்சக்கணக்கான மக்கள் இங்கு வருகின்றனர்.
இந்தக் கோவில் கடற்புரத்தில் அமைந்துள்ளது. நாங்கள்
கோவிலுக்குப் போனபோது இருட்டிவிட்டதால் கடற்கரைக்குச்
செல்ல முடியவில்லை. மற்ற இடங்களை விட இங்கு கடலில்,
அலைகளின் சீற்றம் மிக அதிகமாக இருக்குமாம்.

வெள்ளிமலை





             கடைசியாக நாங்கள் சென்றது வெள்ளிமலை. இது
நாகர்கோவிலிலிருந்து 7கிமீ தொலைவில் உள்ளது. இந்த 200அடி
உயர வெள்ளிமலையின் உச்சியில்  'பாலசுப்பிரமணிய சுவாமி'
திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த மலையின் உச்சியில்
நந்திப்பாதமும், முருகப்பாதமும் இருப்பதாக நம்பப்படுகிறது.
ஆனால் நாங்கள் அதை பார்க்கவில்லை. மேலும் இந்த மலையின்
உச்சியிலிருந்து  பார்த்தால், வடக்குப்பக்கம் பச்சைப்பசேலென
மரங்களும், தெற்குப்பக்கம் கடலும் கண்கொள்ளாக் காட்சியாக
இருக்கும். முருகனின் விசேஷ நாட்களான கந்த சஷ்டி, வைகாசி
விசாகம், தைப்பூசம் போன்ற எல்லா நாட்களும் இங்கு
விசேஷமாக உள்ளன. மேலும் ஒவ்வொரு தமிழ்மாதம் கடைசி
வெள்ளிக்கிழமை இங்கு சிறப்பாக உள்ளது. இந்தக் கோவிலிலும்
பிரசாதமாக கஞ்சி கொடுக்கப்படுகிறது.

இந்தமுறை, இதனுடன் நாகர்கோவில் பயணம் முடிந்தது.
அடுத்தமுறை வேறு சில இடங்களுக்குச் சென்று அவற்றைப்
பற்றி எழுதுகிறேன்.
Related Posts with Thumbnails