சென்னையில் செயிண்ட் ஜார்ஜ் பள்ளியில் நடக்கும்
34வது புத்தகக் கண்காட்சிக்கு முதல்முறையாக சென்ற
சனிக்கிழமை மாலை சென்றிருந்தேன். சனிக்கிழமை மாலை
என்பதால், கூட்டம் அதிகமாக இருந்தது. அரங்கத்தின் வாசலில்
ஒரு புறம், மேடைபோட்டு, திரு.ராஜா போன்ற
பிரபலமானவர்களின் சொற்பொழிவு நடந்து கொண்டிருந்தது.
கூட்டம் அதிகமாக இருந்ததால் அந்தப் பக்கமே செல்ல
முடியவில்லை. மறுபுறம் பந்தல் போட்டு ஜூஸ் கடைகளும்,
ஐஸ்க்ரீம் கடைகளும் இருந்தன. அங்கு குழந்தைகள் அதிகமாக
இருந்தனர். பின்னர் அரங்க வாசலில் நுழைவுச்சீட்டு
எடுத்துவிட்டு உள்ளே நுழைந்தோம். இந்த நுழைவுச்சீட்டுக்கான
பணமும் நலிந்த பதிப்பகங்களுக்கும், எழுத்தாளர்களுக்கும்
போய்ச்சேரும் என்று கூறினார்கள்.
முதலிலேயே வாங்க வேண்டிய புத்தகங்களையும்,
அவற்றின் பதிப்பகத்தின் பெயர்களையும் பட்டியல் போட்டுக்
கொண்டுசென்றிருந்தது, வாங்குவதற்கு எளிதாக இருந்தது.
ஆனால் ஒவ்வொரு பதிப்பகத்தின் ஸ்டால் நம்பர்களைக்
கண்டுபிடிப்பது கடினமாக இருந்தது. ஔவையார் பாதை,
திருவள்ளுவர் பாதை என ஒவ்வொரு வரிசைக்கும் ஒரு பெயர்
வைத்து அதன் வாசலில் பதிப்பக பெயர் மற்றும் ஸ்டால்
எண்களைக் குறிப்பிட்டிருந்தார்கள். நாங்கள் முதலில் போனது,
உயிர்மை பதிப்பகம். அங்கு சில புத்தகங்கள் வாங்கினோம்.
உயிர்மைப் பதிப்பகம் என்பதால், அங்கு திரு.மனுஷ்யபுத்திரன்
இருந்தார். மேலும் ஸ்டாலின் வாசலில், திரு.சாருநிவேதிதா
அவர்களும் அமர்ந்திருந்தார். அன்று இவர்கள் இருவரையும்
தவிர மற்ற எழுத்தாளர்கள் எவரையும் காணமுடியவில்லை.
அதனால் இந்த ஸ்டாலில் கூட்டம் அதிகமாக இருந்தது.
அடுத்ததாக நாங்கள் நுழைந்தது விடியல் பதிப்பகம்.
அங்கும் கூட்டமாகத்தான் இருந்தது. பிரபல பதிப்பகங்களான,
உயிர்மை, விடியல், தமிழினி, விகடன், கிழக்கு,கீழைக்காற்று,
உடுமலை, காலச்சுவடு, வானதி, திருமகள் போன்ற
பதிப்பகங்களில்தான் மக்கள் அதிகமாக இருந்தனர். மேலும் VAO,
TNPSC Group-I மற்றும் Group II தேர்வுகளுக்கான புத்தகங்கள்
அதிகம் விற்பனையாகின. சில ஸ்டாலகளில் ஆட்களே இல்லை.
குழந்தைகளுக்காக நிறைய க்களும் புத்தகங்களும் இருந்தன.
குழந்தைகளுக்காகவே ஸ்டால்கள் நிறைய இருந்தன. வாங்க
வேண்டிய புத்தகங்களுக்காக சில ஸ்டால்களுக்கு மட்டுமே
சென்றோம். இதற்கே மூன்று மணி நேரத்திற்கு மேலாகிவிட்டது.
எல்லா ஸ்டால்களுக்கும் சென்று பார்ப்பதற்கு ஒருநாள் பற்றாது.
புத்தகங்கள் வாங்கி வந்தாகிவிட்டது. இனி அதைப் படிக்க
வேண்டும். படித்துவிட்டு, அவற்றைப் பற்றி வரும் பதிவுகளில்
எழுதுகிறேன்.












