சென்னையின் 34வது புத்தகக் கண்காட்சி

செவ்வாய், ஜனவரி 11, 2011

             
            சென்னையில் செயிண்ட் ஜார்ஜ் பள்ளியில் நடக்கும்
34வது புத்தகக் கண்காட்சிக்கு முதல்முறையாக சென்ற
சனிக்கிழமை மாலை சென்றிருந்தேன். சனிக்கிழமை மாலை
என்பதால், கூட்டம் அதிகமாக இருந்தது. அரங்கத்தின் வாசலில்
ஒரு புறம், மேடைபோட்டு, திரு.ராஜா போன்ற
பிரபலமானவர்களின் சொற்பொழிவு நடந்து கொண்டிருந்தது.
கூட்டம் அதிகமாக இருந்ததால் அந்தப் பக்கமே செல்ல
முடியவில்லை. மறுபுறம் பந்தல் போட்டு  ஜூஸ் கடைகளும்,
ஐஸ்க்ரீம் கடைகளும் இருந்தன. அங்கு குழந்தைகள் அதிகமாக
இருந்தனர். பின்னர் அரங்க வாசலில் நுழைவுச்சீட்டு
எடுத்துவிட்டு உள்ளே நுழைந்தோம். இந்த நுழைவுச்சீட்டுக்கான
பணமும் நலிந்த பதிப்பகங்களுக்கும், எழுத்தாளர்களுக்கும்
போய்ச்சேரும் என்று கூறினார்கள்.



                முதலிலேயே வாங்க வேண்டிய புத்தகங்களையும்,
அவற்றின் பதிப்பகத்தின் பெயர்களையும் பட்டியல் போட்டுக்
கொண்டுசென்றிருந்தது, வாங்குவதற்கு எளிதாக இருந்தது.
ஆனால் ஒவ்வொரு பதிப்பகத்தின் ஸ்டால் நம்பர்களைக்
கண்டுபிடிப்பது கடினமாக இருந்தது. ஔவையார் பாதை,
திருவள்ளுவர் பாதை என ஒவ்வொரு வரிசைக்கும் ஒரு பெயர்
வைத்து அதன் வாசலில் பதிப்பக பெயர் மற்றும் ஸ்டால்
எண்களைக் குறிப்பிட்டிருந்தார்கள். நாங்கள் முதலில் போனது,
உயிர்மை பதிப்பகம். அங்கு சில புத்தகங்கள் வாங்கினோம்.
உயிர்மைப் பதிப்பகம் என்பதால், அங்கு திரு.மனுஷ்யபுத்திரன்
இருந்தார். மேலும் ஸ்டாலின் வாசலில், திரு.சாருநிவேதிதா
அவர்களும் அமர்ந்திருந்தார். அன்று இவர்கள் இருவரையும்
தவிர மற்ற எழுத்தாளர்கள் எவரையும் காணமுடியவில்லை.
அதனால் இந்த ஸ்டாலில் கூட்டம் அதிகமாக இருந்தது.


              அடுத்ததாக நாங்கள் நுழைந்தது விடியல் பதிப்பகம்.
அங்கும் கூட்டமாகத்தான் இருந்தது. பிரபல பதிப்பகங்களான,
உயிர்மை, விடியல், தமிழினி, விகடன், கிழக்கு,கீழைக்காற்று,
உடுமலை, காலச்சுவடு, வானதி, திருமகள் போன்ற
பதிப்பகங்களில்தான் மக்கள் அதிகமாக இருந்தனர். மேலும் VAO,
TNPSC Group-I மற்றும் Group II தேர்வுகளுக்கான புத்தகங்கள்
அதிகம் விற்பனையாகின. சில ஸ்டாலகளில் ஆட்களே இல்லை.
குழந்தைகளுக்காக நிறைய க்களும் புத்தகங்களும் இருந்தன.
குழந்தைகளுக்காகவே ஸ்டால்கள் நிறைய இருந்தன. வாங்க
வேண்டிய புத்தகங்களுக்காக சில ஸ்டால்களுக்கு மட்டுமே
சென்றோம். இதற்கே மூன்று மணி நேரத்திற்கு மேலாகிவிட்டது.
எல்லா ஸ்டால்களுக்கும் சென்று பார்ப்பதற்கு ஒருநாள் பற்றாது.
புத்தகங்கள் வாங்கி வந்தாகிவிட்டது. இனி அதைப் படிக்க
வேண்டும். படித்துவிட்டு, அவற்றைப் பற்றி வரும் பதிவுகளில்
எழுதுகிறேன்.

அம்மா! எனக்காக... - புத்தகத்தைப் பற்றி...

வெள்ளி, ஜனவரி 07, 2011



            
               இந்தப் புத்தகத்தைப் போன வாரம் படித்தேன். இதன்
ஆசிரியர் லக்ஷ்மி. என்னுடைய அம்மாவிற்கு பிடித்த
எழுத்தாளர்களுள் லக்ஷ்மியும் ஒருவர். இவரைப் பற்றியும்,
இவரின் கதைகள் பற்றியும் அம்மா நிறைய என்னிடம்
சொல்லியிருக்கிறாங்க. ஆனால் எனக்குதான் படிப்பதற்கு
சந்தர்ப்பமே கிடைக்கவில்லை. இவருடைய புத்தகங்களில் நான்
படித்த முதல் புத்தகம் இதுதான். லக்ஷ்மி அவர்களுடைய
கதைகள் பெரும்பாலும் குடும்பக் கதைகளாகத் தான்
இருக்கின்றன. அந்த வரிசையில் இதுவும் ஒரு குடும்பக்
கதைதான். மிக எளிமையான வரிகளில் எழுதியிருக்கிறார்.
இந்தக் கதை முழுவதும் சரயு, அனுபமா, யோகநாதன் என்ற
மூன்று பேரைச் சுற்றியே அமைந்திருக்கிறது. ஒரு சின்னப்
பெண்ணின் ஏக்கமும், அம்மா பாசமும் மிக அழகாகக்
கூறப்பட்டிருக்கிறது. சாதாரண குடும்பக் கதைதான்
என்றாலும் இவர் எழுதியிருக்கும்விதம் நன்றாக உள்ளது.

புத்தகத்தின் பெயர் : அம்மா! எனக்காக...
பதிப்பகம்                : திருமகள் நிலையம், சென்னை
முதல் பதிப்பு          : டிசம்பர் 1986
ஐந்தாம் பதிப்பு       : ஜூலை 2007
விலை                    : ரூ.55 /-

சாலை பாதுகாப்பு வாரம்

வியாழன், ஜனவரி 06, 2011

           
               ஆண்டுதோறும் ஜனவரி 1ம் தேதி முதல் 7ம் தேதி
வரை சாலை பாதுகாப்பு வாரமாக கொண்டாடப்படுகிறது. 
இந்த வருடம் 22வது வருடமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
அதற்காக, எல்லாப் பஸ்ஸிலும் சாலை பாதுகாப்பு வாரம் என்று
நோட்டீஸ் ஒட்டப்பட்டு இருக்கிறது. இதையொட்டி
வருடாவருடம், சாலை விதிகளைப் பற்றியும், வாகன
விபத்துகளைத் தடுப்பது பற்றியும் மக்களுக்கு அரசாலும்
போலீசாலும் எச்சரிக்கை விடப்படுகிறது. ஆனாலும்
ஆண்டுதோறும் நடக்கும் விபத்துகளின் எண்ணிக்கை
அதிகரித்துக் கொண்டேதான் வருகிறது.


            இதற்கு முக்கியக் காரணம் வெளிநாடுகளைப் போல, நம்
நாட்டில் சாலைவிதிகளைப் பின்பற்றாததுதான். எங்கள் வீடு
தேசிய நெடுஞ்சாலைக்கு அருகில் உள்ளது. இச்சாலையில் 2
மாதத்திற்கு ஒருமுறை விபத்து நடக்கிறது. அதுவும் இரவு
நேரங்களில், பஸ்களும் கார்களும் போகும் வேகத்தைப்
பார்த்தால், சாலையில் நடக்கவே ரொம்ப பயமாக இருக்கும். 
இதுபோல, இரவில் எதிர்வரும் வாகனங்களில் வருபவர்கள்,
கண்கள் கூசும் அளவுக்கு ஹெட்லைட் போடுவதாலும் விபத்து
அபாயம் உள்ளது.



             பள்ளிக் குழந்தைகளை ஆட்டோவிலும், வேன்களிலும்
ஏற்றிச் செல்லும் போது விதிமுறை மீறப்படுகிறது. நிறைய
குழந்தைகளை ஒரே ஆட்டோவில் ஏற்றிச் செல்வது, திருவிழா
போன்ற விசேஷங்களுக்கு லாரிகளில் கும்பலாக ஆட்கள் ஏறிச்
செல்வது போன்ற தவறுகளை மக்கள் தவிர்க்க வேண்டும்.
அதிகாரிகளும் அனுமதிக்கக்கூடாது. அதிகமான நபர்களை
ஏற்றும் வாகனத்தை அதே இடத்தில் நிறுத்தி உரிமத்தை ரத்து
செய்யவேண்டும். ஹெல்மெட் அணியாமல் செல்வதாலும்,
குடிபோதையில் வண்டி ஓட்டுவதாலும் விபத்துகளின்
எண்ணிக்கை அதிகரித்துவிட்டது. குழந்தைகளுக்கும்
சாலை விதிமுறைகளை பின்பற்ற சொல்லிக் கொடுக்க
வேண்டும். சாலைகளை கடக்கும் போதும், ஆளில்லா ரயில்வே
லெவல் கிராசிங்கில் கடக்கும் போதும்  இருபுறமும் பார்த்து
செல்ல வேண்டும். 
இதுபோல ஆளில்லா லெவல் கிராசிங்கை மக்கள் கடக்கும்
இந்த வீடியோ, எனக்கு மெயிலில் வந்தது.


              இவ்வாறு நடக்கும் விபத்துகளை எப்படித் தடுப்பது?
சாலை விதிகள் முறையாக பின்பற்றப்படுகிறதா, விதிமுறை
மீறல்களுக்கு தகுந்த தண்டனை வழங்கப்படுகிறதா என்பது
போன்ற பல்வேறு கேள்விகள் நமக்குள் எழுந்தாலும், சாலை
விதிகளை கடைபிடிக்க வேண்டிய பொறுப்பு மக்களான
நம்மிடமும் உள்ளது. அதே நேரத்தில் விதிமுறை மீறல்களுக்கு
டிராஃபிக் போலீசார் துவங்கி போக்குவரத்து உயர் அலுவலர்கள்
வரை பாரபட்சமின்றி நடவடிக்கையில் இறங்க வேண்டும்.
தேசிய நெடுஞ்சாலை போலீசாரின் ரோந்துப் பணியும் மக்களைப்
பாதுகாக்கும் வகையில் அமைய வேண்டும். வெளிநாடுகளைப்
போல, விதிமுறைகளை மீறுபவர்கள், விபத்துக்கு
காரணமானவர்களின் உரிமம் ரத்து செய்ய அதிரடி நடவடிக்கை
எடுக்க வேண்டும். இவ்வாறு செய்தால் இந்தப் புத்தாண்டிலாவது,
ஓரளவேனும் விபத்துகளை நாம் குறைக்கலாம்.
Related Posts with Thumbnails