சென்ற வாரம் டெல்லி தமிழ்ச் சங்கத்தில்
'காவல் கோட்டம்' திரு.சு.வெங்கடேசன் அவர்களின்
பாராட்டுவிழாவுக்குச் சென்றிருந்த போது திருமதி.சுசீலாம்மா
இந்தப் புத்தகத்தை எல்லாருக்கும் கொடுத்தார்.
திரு.ஜெயமோகன் எழுதியுள்ள யானை டாக்டர் என்ற
இந்த நாவலை, காட்டைப் பற்றியும் காட்டு விலங்குகள் பற்றியும்
மக்களிடையே விழிப்புணர்ச்சி ஏற்படுத்துவதற்காக இலவசமாக கொடுக்கிறார்கள்.
இந்த நாவலில் யானை டாக்டர் என்றழைக்கப்பட்ட
டாக்டர் வி.கிருஷ்ணமூர்த்தி பற்றிக் கூறப்பட்டுள்ளது. அவர் வன
விலங்குகளுக்கு மருத்துவம் செய்த விதமே வித்தியாசமானது.
அதிலும் குறிப்பாக யானைகளுக்காக இவர் தனது வாழ்நாளை
அர்ப்பணித்துக் கொண்டவர்.
டாக்டர் கே என்றழைக்கப்பட்ட இவர்தான் உலகிலேயே
அதிக யானைகளுக்கு சவப் பரிசோதனையும், அதிகமான
யானைகளுக்கு பிரசவமும் பார்த்துள்ளார்.
இந்த நாவலில் வலியைப் பற்றியும் புழுவைப் பற்றியும்
அவர் சொல்லியிருக்கும் விளக்கம் அருமை. மக்களால் வனமும் வனவிலங்குகளும் அனுபவிக்கின்ற கஷ்டங்கள் இந்த நாவலில்
விவரமாகக் கூறப்பட்டுள்ளது. இதற்காக இவர் எடுத்த முயற்சிகள்
மிக அதிகம்.
பலவருடங்களாக பத்மஸ்ரீ விருதுக்கு இவரது பெயர்
பரிந்துரைக்கப்பட்டும் கடைசி வரை இவருக்குக் கிடைக்காதது,
மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது.
2000 ஆம் ஆண்டு, வனப்பேணுநர்களுக்கு வழங்கப்படும்
மிக உயரிய விருதான வேணுமேனன் ஏலீஸ் விருது டாக்டர்
கிருஷ்ணமூர்த்திக்கு வழங்கப்பட்டது. இலக்கிய ஆர்வமும்
உள்ள இவர் 2002 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 9 ஆம் தேதி தனது
73 ஆம் வயதில் மரணமடைந்தார்.




