தேவை... ரயிலில் போதிய மருத்துவ வசதி...

புதன், டிசம்பர் 29, 2010

                                                           
                 இது நடந்தது 2007 பிப்ரவரியில். நானும் என் 
அப்பாவும் எனது ஊரிலிருந்து சென்னைக்குச் சென்று 
கொண்டிருந்தோம். பின் அங்கிருந்து நான் ஹைதராபாத்தில் 
ஒரு இன்டர்வியூவுக்குச் செல்வதாக இருந்தது. எனக்கு சிறு 
வயதிலிருந்தே வீசிங் தொல்லை உண்டு. அன்றும் அந்த 
தொல்லையால் ஊரிலேயே டாக்டரிடம் காண்பித்துவிட்டு 
இன்டர்வியூ கண்டிப்பாக அட்டென்ட் பண்ண வேண்டுமென 
அன்றிரவே சென்னைக்குச் சென்று கொண்டிருந்தோம். 
நள்ளிரவில் திடீரென எனக்கு வீசிங் அதிகமாகியது. மற்ற 
பயணிகள் அனைவரும் தூங்கிக் கொண்டிருந்தனர். அப்பாவுக்கு 
என்ன செய்வதென்று தெரியவில்லை. கடுமையான மூச்சுத் 
திணறலுடன் இருந்த என்னைத் தனியாக விட்டுப் போக 
மனமின்றி, ரயிலில் உள்ள டாக்டரை ஒவ்வொரு பெட்டியாகத்
தேடிப் போனார். ரயிலில் டாக்டர் இல்லை. 
               பின் வண்டி ஏதோ ஒரு ஸ்டேஷனில் நின்றது. அப்பா 
அந்த ஸ்டேஷனில் இறங்கி ரயில்வே டாக்டரை அழைத்து வர 
ஓடினார். அங்கும் எவரும் இல்லை. ஸ்டேஷனில் அனைவரும் 
உறங்கிக் கொண்டிருந்தனர். ரயிலும் கிளம்பி விட்டது. எனவே 
அப்பா வண்டியில் ஏறி விட்டார். ஒரு வழியாக உயிரைக் 
கையில் பிடித்துக்கொண்டு சென்னை வந்து சேர்ந்தேன். பின்னர் 
சித்தப்பாவின் உதவியால் அங்கு மருத்துவமனையில் சிகிச்சை 
எடுத்துவிட்டு அன்றிரவே ஹைதராபாத் இன்டர்வியூவுக்குச் 
சென்றேன். என்னால் அந்த இரவுப் பயணத்தை முழுவதுமாக 
மறக்க முடியவில்லை.
               என் நிலைமை வயதானவர்களுக்கு நடந்திருந்தால் 
எவ்வளவு கஷ்டமாக இருந்திருக்கும் என்பதை நினைத்துக் கூட 
பார்க்க முடியவில்லை. சில நாட்கள் கழித்து , நடிகரும் ,செய்தி
வாசிப்பாளருமான திரு. வரதராஜன் அவர்களின் பேட்டியை ஒரு 
பத்திரிகையில்  படித்தேன். கிட்டத்தட்ட இதே நிலையில், 
ரயிலில் போதிய மருத்துவ வசதி இல்லாமல், அவரது 
மனைவியை இழந்ததை அறிந்தேன். மிகவும் வருத்தமாக 
இருந்தது.
             இது நடந்து கிட்டத்தட்ட நான்கு வருடங்கள் ஆகப் 
போகிறது. இதை ஏன் இப்போது சொல்கிறேன் என்றால்,
போன மாதம் கூட, என் அப்பா சென்னைக்கு சென்று 
கொண்டிருக்கும் போது இதே போல,ரயிலில் நெஞ்சு 
வலியால் கஷ்டப்பட்டிருக்கிறார். அப்போதும் ரயிலில்
மருத்துவர் யாரும் இல்லை. நாம் தேடும்போது, டிக்கட் 
பரிசோதகர் கூட இருப்பதில்லை. சிறிது நேரத்தில், வலி 
தானாகவே சரியானதால் பெரிதாகப் பிரச்சனை இல்லை 
அப்பாவுக்கு. இதே ஹார்ட் அட்டாக் போல, பெரியதாக 
ஏதும் இருந்திருந்தால் , நினைத்துக் கூடப் பார்க்க 
முடியவில்லை.
              ரயிலில் ஒவ்வொரு பெட்டிக்கும் ஒரு டிக்கட் 
பரிசோதகர் இருக்கிறார். சில நேரங்களில்தான் அவர்கள் 
அந்தப் பெட்டியிலேயே தங்குகின்றனர். இந்த நிலை மாறி, 
அவர்கள் கண்டிப்பாக பெட்டியில்தான் இருக்க வேண்டும்.
அதே போல சில பெட்டிகளில்தான் போலீசும் இருக்கின்றனர்.
ஒவ்வொரு பெட்டியிலும் இருந்தால் தானே மக்கள் 
பாதுகாப்புடன் பயணிக்க முடியும்? கண்டிப்பாக ஒவ்வொரு 
பெட்டிக்கும் ஒரு மருத்துவரும், ஒரு முதலுதவிப்
பெட்டியும் அவசியம் தேவை.
            முன்பெல்லாம் ரயில் டிக்கெட் எடுக்கும்போதே  
டிக்கெட் எடுக்கும் பார்மில், மருத்துவராக இருந்தால்,
மருத்துவர் என்று குறிப்பிட வேண்டும். அப்படியாவது,
ரயிலில் ஒன்றிரண்டு மருத்துவர்கள், ஏதாவது ஒரு 
பெட்டியிலாவது இருந்தனர். இப்போது அதுவும் இல்லை.   
               வருடா வருடம் ரயில்வே பட்ஜெட்டில் பல புதிய 
திட்டங்கள் அறிமுகமாகின்றன; வசதிகள் 
மேம்படுத்தப்படுகின்றன. ஆனால் இன்றும் ரயில்களில் 
போதிய மருத்துவ வசதிகள் இல்லை.  கால் ஊனமுற்றவர்கள் 
மிகவும் கஷ்டப்பட்டுதான் இன்னமும் ரயிலில் ஏறுகிறார்கள். 
என்று மாறும் இந்த நிலை?

ஸ்ரீவில்லிபுத்தூர்-ஆண்டாள் திருத்தேர்

சனி, டிசம்பர் 25, 2010


              தமிழக அரசின் சின்னமாக இருக்கும் ஸ்ரீவில்லிபுத்தூர்
ஆண்டாள் கோயில் குறித்து அறிந்தவர்களுக்கு,
தமிழகத்திலேயே திருவாரூர் தேரை அடுத்து, இரண்டாவது
பெரிய தேர் இக்கோயிலுக்கு சொந்தமானது என்ற விவரம்
நிச்சயம் ஆச்சரியத்தைத் தரும்.
              இத்தேர் பல நூறு ஆண்டுகளுக்கு முன், நாங்குநேரி
மடம் பரமஹம்ச பட்டர் பிரான் ராமானுஜ ஜீயர் சுவாமிகளால்
உபயமாக வழங்கப்பட்டது. தேர் முழுவதும் தேக்கு, கோங்கு
போன்ற உயர்ரக மரங்களால் செய்யப்பட்டது என்பதால்
இன்றளவும் உறுதியாக இருக்கிறது.
            இதன் விசேஷம் என்னவென்றால், ராமாயண, மகாபாரத
கதைகளைக் குறிக்கும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிற்பங்கள் வடியவமைக்கப்பட்டுள்ளன. சுமார் 1,500 டன் எடையும், 112அடி
உயரமும் கொண்ட இத்தேரின் சக்கரம் முன்பு மரத்தால்
செய்யப்பட்டு இருந்தது. இதனால் தேரை நிலைக்குக் கொண்டு
வர பல மாதங்களாகும். தேரை இழுப்பதற்கு பக்கத்து ஊர்களில்
இருந்து எல்லாம் ஆட்களைத் திரட்டிக் கொண்டு வருவார்கள்.
இந்தத்தேரின் உச்சியில் இருக்கும் கொடி, பக்கத்து
ஊர்களிலிருந்து பார்ப்பவர்களுக்கும் தெரியுமாம்.
              திருச்சி 'பெல்' நிறுவனம் 1986ல் இரும்பு சக்கரங்களைப்
பொருத்தியது. இதன் பிறகு, புல்டோசரின் உதவியாலும் முன்று
மணி நேரத்தில் தேர் நிலைக்குக் கொண்டு வரப்படுகிறது. மேலும்
சிகப்பு நிறத் துணியால் ஆன அடுக்குகளும் குறைந்து இப்போது
மூன்று அடுக்குகளே உள்ளன.
               இவ்வாறு பல பெருமைகளை உடைய ஸ்ரீவில்லிபுத்தூர்
ஆண்டாள் கோயிலின் தேர், ஆண்டுதோறும் ஆகஸ்டு மாதம்,
ஆடிப்பூரத்தன்று இழுக்கப்படுகிறது.

ஸ்ரீவில்லிபுத்தூர் - வரலாறு

வியாழன், டிசம்பர் 23, 2010

             
              எனது ஊரான  ஸ்ரீவில்லிபுத்தூர், வில்லி என்ற மன்னன்
ஆண்டதால் வில்லிபுத்தூர் என்றும், ஆண்டாள் பிறந்த
ஊராதலால், 'ஸ்ரீ' என்னும் திருநாமத்தோடு ஸ்ரீவில்லிபுத்தூர்
என்றும் அழைக்கப்படுவதாக, பள்ளி நாட்களில் படித்திருக்கிறேன்.
ஆனால் எனக்குத் தெரியாத விஷயங்களை சமீபத்தில் நாளிதழில்
படித்தேன்.
            மதுரையைக் கைப்பற்றிய கான்சாகிப் என்ற மருதநாயகம்,
ஆங்கிலேயருக்கு வரி கொடுக்க மறுத்த 'நெற்கட்டுச் செவ்வல்'
பாளையக்காரர் பூலித்தேவரை வெல்ல, ஸ்ரீவில்லிபுத்தூரில்
முகாமிட்டார். 1756 மே 6 -ல் நடந்த போரில் அவரை வெல்ல
இயலாமல், ஸ்ரீவில்லிபுத்தூர் கோட்டையைக் கைப்பற்றினார்.
பின், அதை தரைமட்டமாக்கினார். இப்போது எந்தத் தடயமும்
இல்லாத அந்த இடம் 'கோட்டைத்தலைவாசல்'
என்றழைக்கப்படுகிறது. (அந்த இடம் முழுவதும் இப்போது
வீடுகளாகி, கோட்டைத்தலைவாசல் தெருவாக மாறிவிட்டது.
இந்தத் தெருவில்தான் நாங்கள் 18 வருடங்கள் இருந்தோம். எனது
பள்ளி வாழ்க்கை முழுவதும் இங்குதான் கழிந்தது. ஆனால் அந்தத்
தெருவிற்கான வரலாறு இப்போதுதான் தெரிந்தது.)
              மதுரைக்கும் நெல்லைக்கும் நடுவில் ஸ்ரீவில்லிபுத்தூர்
கோட்டை இருந்ததால், ஆங்கிலேயர் ஆட்சியில் 'நடுமண்டலம்'
என்றழைக்கப்பட்டது. ஆங்கிலேயரின் ராணுவ தளவாடமாகவும்
இருந்தது.
              ஸ்ரீவில்லிபுத்தூர் பெயர் காரணத்திற்கு புராணங்கள்
உண்டு. சாபத்திற்கு ஆளான வில்லி, கந்தன் என்ற இரு
முனிவர்கள், வேடர்களாக பிறந்து வளர்ந்தனர். ஒருநாள்
கந்தனை புலி அடித்துக் கொன்றது. சகோதரரைத் தேடி வில்லி
அலைந்தார். அன்றிரவு அவரது கனவில் கந்தன் தோன்றி, தான்
இறந்த செய்தியைத் தெரிவித்தார்.பின், கந்தன் இறந்த இடத்தை
சுத்தம் செய்து ஒரு நகரமாக மாற்றியதுதான், ஸ்ரீவில்லிபுத்தூர்
என்கின்றனர்.
              ஆண்டாள் கோயில் கி.பி. 788ல் கட்டப்பட்டது. இங்குள்ள
நரசிம்மர் சன்னதி, கல்வெட்டுகளில் ஒன்றான, சோழனின்
தலைகொண்ட வீரபாண்டியன் (கி.பி.946 -966 ) கல்வெட்டில்,
இக்கோயில் 'ஜலசயநாட்டுக் கிடந்தருளின பரமசுவாமி கோயில்'
என்றழைக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
             சோழமன்னன் முதலாம் குலோத்துங்கன் (கி.பி.1070 -
1120 ) ஆட்சியில் இந்த ஊர், 'விக்கிரமசோழ சதுர்வேதி
மங்கலம்' என்றழைக்கப்பட்டது. பிற்கால பாண்டியர்
கல்வெட்டில், இக்கோயில் வடபெருங்கோயில் பள்ளி
கொண்டருளிய பெருமாள் கோயிலாக இருந்தது. பின்,
கி.பி.13 ம் நூற்றாண்டில் இந்த ஊர், 'பிரம்மதேய குலசேகர
சதுர்வேதி மங்கலம்' என்ற பெரிய நகரமாக பிற்கால
பாண்டியர்களால் விரிவுபடுத்தப்பட்டது. கோயிலைச் சுற்றி
கோட்டைச்சுவர் கட்ட ஸ்ரீவல்லபபாண்டியன் பொற்கிழி வழங்கி
உள்ளார்.
            புனர்வேலி என்ற ஊரைச் சேர்ந்த சங்கரன்முறி அருளக்கி
என்பவர் பாராங்குசபுத்தூர் குளத்தை சீர்படுத்தி,  வடக்குப் பகுதி
மதகை புதுப்பித்ததாக இங்கு ஆய்வு செய்த தொல்லியல்
நிபுணர்கள் கண்டுபிடித்து உள்ளனர். இந்த மதகை இப்போதும்
ஸ்ரீவில்லிபுத்தூர் குளத்தில் காணலாம்.
             ஆண்டாள் கோயில் பல காலகட்டங்களில், பலரால்
புதுப்பிக்கப்பட்டு, விரிவுபடுத்தப்பட்டது. மதுரையை ஆண்ட
திருமலைநாயக்கர், குற்றாலத்திற்கு செல்லும் வழியில், இங்கு
தங்குவதற்கு ஒரு மாளிகை கட்டினார். பின்னர் அந்தக்கட்டடம்
கோர்ட் அலுவலமாக இருந்தது. தற்போது அதை நினைவுச்
சின்னமாக்க முயன்று வருகின்றனர்.



             இக்கோயிலின் சிறப்பம்சமான 192 அடி உயர
ராஜகோபுரம் கி.பி.17ம் நூற்றாண்டில் நிறுவப்பட்டது. தமிழக
அரசின் முத்திரை சின்னமாக இருப்பதும் இக்கோபுரம்தான்.
புராணம், வரலாறுகளைத் தாங்கி நிற்கும் ஸ்ரீவில்லிபுத்தூர்,
தமிழகத்தின் கிரீடத்தில் வைரமாக ஜொலிக்கிறது.
Related Posts with Thumbnails