ஆசிரியர் தினம்...

ஞாயிறு, செப்டம்பர் 05, 2010

              இன்று ஆசிரியர் தினம். ஆசிரியர் தினம் என்றாலே நமக்கு நமது முன்னாள் ஜனாதிபதி. திரு. டாக்டர்.இராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்தநாள்தான் நினைவுக்கு வரும்.

 ஆனால் என் நினைவில் வருவது எனது பள்ளி நாட்களே! நான் படித்தது, பெண்கள் மட்டுமே படிக்கும் கான்வென்ட்டில். அங்கு ஆசிரியர்கள் அனைவரும் பெண்களே! பள்ளியில் படிக்கும்போது, ஒவ்வொரு வருடமும், ஆசிரியர் தினத்தையொட்டி, பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி, ஓவியப்போட்டி, நடனம், நாடகம் எனப் பல போட்டிகள் நடக்கும். அதில் கலந்துகொண்டு, ஒரு வாரத்துக்கு முன்பிருந்தே, Practice-க்காக, Class-ஐக் Cut அடித்துவிட்டுச் செல்வதில் அப்பொழுதெல்லாம் பயங்கர ஆர்வமாக இருக்கும். 
ஆசிரியர் தினத்தன்று, நடனம், நாடகம் முதலியக் கலைநிகழ்ச்சிகள் நடக்கும். போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசுகளும் அன்று வழங்கப்படும். அன்று Uniform-க்கு விடுமுறை. எனவே எல்லோரும் கலர் கலராக உடைகள் அணிந்து வருவோம். ஆசிரியர்களுக்கு Gift கொடுப்பதற்காக அனைவரிடமும் ஒரு வாரம் முன்பே பணம் வசூலிக்கப்படும்; அன்று, ஆசிரியர்களுக்கு சிறப்பு விருந்தும் ஏற்பாடு செய்யப்படும். பின்னர் ஆசிரியர்களுக்கு இடையேயும் விளையாட்டுகள், போட்டிகள் நடைபெறும். இதுதவிர, அந்தந்த வகுப்பு ஆசிரியர்களுக்கு, அந்த வகுப்பில் படிக்கும் மாணவர்கள் Gift வாங்கிக் கொடுப்பர். முக்கியமாக அன்று எந்த வகுப்புகளும் நடைபெறாது; ஒரேக் கொண்டாட்டமாக இருக்கும்.


                  முதல் வகுப்பிலிருந்து, கல்லூரி இறுதியாண்டு வரை எனக்குப் பாடம் கற்பித்த அனைத்து ஆசிரியர்கள் பெயரும் இன்றுவரை நினைவில் உள்ளது. ஆனால் அவர்களில் சிலர் இன்று உயிருடன் இல்லை. அவர்களுள் எனக்கு முதலாம் வகுப்பெடுத்த, மங்களம் டீச்சரும் அடங்குவார். எத்தனையோ ஆசிரியர்கள் எனக்குப் பாடம் எடுத்திருந்தாலும்,

 முதல் வகுப்பெடுத்த மங்களம் டீச்சருக்கே இன்று எனது வாழ்த்துக்களையும், நன்றிகளையும் தெரிவிக்கக் கடமைப்பட்டிருக்கின்றேன். அவர் இன்று உயிருடன் இல்லை என்றாலும், அவர் சொல்லிக்கொடுத்த உயிர் எழுத்துகளும், மெய்யெழுத்துகளும்தான் எனக்கு ஆரம்பக் கல்வியாக அமைந்தது. இன்று நான் இந்த வலைப்பக்கம் ஆரம்பிப்பதற்கே உதவியாகவும் உள்ளது. இதுவரை அவருக்காக நான் எதுவும் செய்யவில்லை எனினும், இன்று அவரை நினைத்து, அவரைப் பற்றி எழுதுவது பெருமையாகவும் சந்தோஷமாகவும் உள்ளது. எனக்குப் பாடம் எடுத்த ஆசிரியர்கள் அனைவருக்கும் இந்த ஆசிரியர் தினத்தில் எனது நன்றிகளையும், வாழ்த்துக்களையும் இந்தப்பதிவின் மூலமாகத் தெரிவித்துக்கொள்கிறேன்.

காதல் கல்யாணம் - II

சனி, செப்டம்பர் 04, 2010

                போன பதிவின் தொடர்ச்சியாக, என் தோழியின் காதல் வாழ்க்கைக் கதையின் மீதிப்பகுதியை இதில் எழுதுகிறேன்.
இனி அவள் கூறியவை, " குழந்தைப் பிறந்ததுக்கப்புறமாவது, எல்லாம் சரியாகும்னு நெனச்சேன். அந்த நம்பிக்கையிலதான், டெலிவரிக்கப்புறம் குழந்தையத் தூக்கிக்கிட்டுப் போனேன். அதுக்கப்புறமும் மாறவேயில்லை. அவர் செய்றதுதான் சரின்னு சொல்வார்; நான் ஏதாவது நல்ல விஷயம் சொன்னாக்கூட, அவர் நல்லதுக்குத்தான சொல்றோம்னு ஏத்துக்கமாட்டார்; பதிலுக்கு வார்த்தைகளாலக் காயப்படுத்துவார்; இதுவரைக்கும் என் வாழ்நாளில், அப்படிப்பட்ட வார்த்தைகளைக் கேட்டிருக்கவே மாட்டேன். என் பணம், நான் சம்பாதிக்கிறேன்; அதவச்சு நான் என்ன வேணும்னாலும் செய்வேன்னு சொல்வார். அவர் ஒண்ணு முடிவுபண்ணிட்டா, இடியே விழுந்தாலும் அத மாத்தவும் மாட்டார்; மாத்திக்கவும் மாட்டார். இப்படி ஒருநாள் எங்களுக்குள்ளப் பேச்சுவார்த்தை முற்றி, கடுமையான வார்த்தைகளை, ' நான் சொல்லாதீங்க எனக்கு ரொம்பக் கஷ்டமாயிருக்கு' னு சொல்லியும், சொன்னார். எனக்கு ரொம்ப மனசுக்குக் குத்திக்குத்திக் காண்பிக்குற மாதிரி இருந்தது. சொல்லாதீங்கன்னு கெஞ்சியும் அவர் கேட்கல. உன்மையிலயே, என் மேல பாசம் அவருக்கு இருக்கானு தெரியல. எதிரி மாதிரிதான் நடத்தினார். இதக்கேட்டா, 'நான் உனக்கு அது வாங்கிக்குடுக்கலையா? இது வாங்கிக்குடுக்கலையா?' னு சொல்றார். ' உங்ககிட்ட அன்பையும், பாசத்தையும்தான எதிர்ப்பாக்குறேன்; அதவிட வேற எனக்கு என்ன பெரிசு?' னு சொன்னா, அதக்கேட்கல. அதனால, குழந்தையத்தூக்கிக்கிட்டு, அம்மா வீட்டுக்கு வந்துட்டேன்.

 படிக்கிற காலத்துல, எங்கூடப் படித்த ஒரு பையன், அவரோட Friend. அந்தப் பையன் என்னைக் காதலித்ததாகவும், அவனிடம் இவர், ' அவள் உனக்குக் கிடைக்கமாட்டாள்; நான் அவளைக் காதலித்துக் கல்யாணம் செஞ்சுகாட்டறேன்' னு Bet கட்டியிருக்கார். ' இதெல்லாம் விளையாட்டுக்குத்தான் அவனிடம் சொன்னேன். ஆனா, உண்மையிலயே உன்னைக் காதலிக்கிறேன்' னு ஒருநாள் சொன்னார். அவர் இப்படி நடந்துக்கிறதையெல்லாம் பார்க்கும்போது, அது உண்மையோனு எனக்குத் தோணுதுடி; ரொம்பப் பயமாயிருக்கு. இப்போ ரெண்டு வீட்டுலயும் பேச்சுவார்த்தை நடந்துகிட்டு இருக்கு. ஒரு முன்னேற்றமும் இல்ல. நான் வந்து ரொம்ப நாளாகியும்,  ஃபோன்ல பேசும்போதுகூட, அன்பா, ஆதரவா பேசுறதில்ல. ஃபோன் பேசினாக்கூட சண்டதான்; சமாதானமாப் பேசமாட்டேங்கிறார்" என அவளுடைய நீண்ட கதையை, சொல்லிமுடித்தாள்.
 

               நானும் அவளிடம், " சண்ட வரும்போது நீயாவது விட்டுக்குடுத்துப் போயிருக்கலாமே" என்று கேட்டேன். அதற்கு அவள், " உனக்குத்தான் என்னப்பத்தித் தெரியுமேடி, நான் விட்டுக்குடுத்தாலும் அவர் என்னை  வார்த்தைகளாலக் கொல்லுறார்" எனக் கூறினாள். "இப்போ என்ன முடிவு பண்ணியிருக்க? அவர்கிட்டயிருந்து பிரியப்போறியா? இப்படிப்பட்டவரோட நீ வாழ்ந்து காலம்பூரா அழுதுக்கிட்டிருக்கப் போறியா?" எனக் கேட்டேன். "ஆசை ஆசையாக் கல்யாணம் பண்ணினது, பிரியறதுக்குத்தானா? அப்புறம் இந்தக் குழந்தையோட எதிர்காலம் என்ன ஆகும்?                 
               என்னடா, அவரப்பத்திக் குறையா சொல்றேன்னு நீ நெனைக்கலாம். நல்ல விஷயங்கள் நிறைய செஞ்சாலும், அவர் பேசற வார்த்தைகள் முன்னாடி அதெல்லாம் அழிஞ்சு போயிடுது. எங்கிட்டயும் நிறைய தவறுகள் இருக்கு. அதையெல்லாம் நானும் மாத்திக்கிட்டு, அவரோட சேர்ந்து வாழணும்னுதான் ஆசை. தினமும் அவர்கிட்டயிருந்து ஒரு SMS வராதா,  Phone call வராதானு காத்துக்கிட்டிருக்கேன். அவர் பிசியா இருக்கறதால், நான் அவருக்கு Call பண்ணாலோ, SMS பண்ணாலோ அவருக்குக் கோபம்தான் வரும்; சண்ட போடுவார். திரும்பத்திரும்ப அவர்கிட்ட நான் கெஞ்சிக்கேட்குறது இதுதான், கடுமையான, மனசுப்புண்படும்படியான வார்த்தைகளைச் சொல்லாதீங்க; என்னைப் புரிஞ்சிக்கோங்கன்னுதான். அவருக்கு அந்தச்சொற்கள் சாதாரணமா இருந்தாலும், கேட்குற எனக்கு ரொம்பக் காயப்படுத்துதுடி. எவ்வளவு நாளானாலும், அவர் மனசுமாறி, என்னைத்தேடி வருவார்; அவரை நம்பி, அவருக்காகவே நான் இருக்கேங்கிறதப் புரிஞ்சிக்கிட்டு, நான் தேவைனு வருவார்; அதுக்காகக் காத்துட்டிருக்கேன்" என அவரை விட்டுக்கொடுக்காமல் பேசினாள்.

 நானும் அவளிடம், " உன் நம்பிக்கை வீண்போகாது; கண்டிப்பாகச் சீக்கிரம் அவர் உன்னைப் புரிந்துகொண்டு உன்னைத்தேடி வருவார்; நீயும் சந்தோஷமாக அவருடன் போகப்போகிறாய்" என ஆறுதல் கூறிவிட்டு வந்தேன். வீட்டிற்கு வந்ததும் இரவெல்லாம் அவளை நினைத்துத் தூக்கமே வரவில்லை. நானும் அவளும் சேர்ந்துப் படிக்கும்போது, அவள் ரொம்ப அமைதியான, பயந்த சுபாவமுள்ள பெண்; யாரிடமும், அதிர்ந்தும் பேசமாட்டாள்; அதிகமாகவும் பேசமாட்டாள். எல்லா ஆசிரியர்களிடமும் நன்கு படிக்கும் பெண்; நல்ல ஒழுக்கமுள்ள மாணவி என்று பெயரெடுத்தவள். அவளுக்கா இந்த நிலைமை? என நினைக்கும்போது ரொம்பக் கஷ்டமாக இருந்தது. இப்படி எல்லாரிடமும் நல்ல பெயர் எடுத்து என்ன பிரயோஜனம்? கணவனிடம் அவளால் நல்ல பெயர் எடுக்கமுடியவில்லையே? இருப்பினும், அவளது நம்பிக்கை வீண்போகாது. இன்று பத்திரிகைகளிலும், தொலைக்காட்சியிலும் விவாகரத்துத் தொடர்பாக ஏகப்பட்ட செய்திகள் வருகின்றன. அவற்றில் பெரும்பாலானவை காதல் கல்யாணங்கள்தான். காதலித்துக் கல்யாணமும் பண்ணி, பிரிவதற்குத்தானா வாழ்க்கை? இந்தத் தோல்வியையும், வாழ்ந்த வாழ்க்கையையும் தான் மறக்கமுடியுமா? இதைப் புரிந்துகொள்ளுமா. இன்றைய சமுதாயம்? இந்த நிலைமை என் தோழிக்கு வந்துவிடக்கூடாது. அவளது நம்பிக்கையின்படி, அவளது கணவன் சீக்கிரம் மனது மாறி, அவளைக் கூட்டிச்செல்ல வேண்டுமெனத் தினமும் கடவுளிடம் வேண்டிக்கொள்கிறேன். என்னைப் பொருத்தவரை லவ் மேரேஜோ, அரேஞ்ஜுடு மேரேஜோ ஒருவருக்கொருவர் நன்குப் புரிந்து கொண்டால் சண்டைகள் வராது; வாழ்க்கையும் இனிக்கும். இதற்காக தினமும் சிறிது நேரமாவது அவர்கள் ஒதுக்க வேண்டும். அதைச் செய்வார்களா?

காதல் கல்யாணம் - I

வெள்ளி, செப்டம்பர் 03, 2010

              சமீபத்தில் என் தோழி ஒருத்தியைச் சந்திக்க நேரிட்டது. நீண்ட நாளைக்குப் பிறகு சந்தித்ததால், ஆளே அடையாளம் தெரியாமல் மாறிவிட்டிருந்தாள். அவள், அவளுடன் படித்த மாணவனையேக் காதலித்து, இரண்டு வீட்டார் சம்மதத்துடன் கல்யாணம் செய்து கொண்டிருக்கிறாள். இப்பொழுது அவளுக்கு ஒரு குழந்தையும் உள்ளது. என்னால் அவளது கல்யாணத்திற்குப் போக முடியாததால், அவள் ஊருக்கு வந்திருப்பது தெரிந்து, அவளைப் பார்க்கச் சென்றேன். அவளோ அழாதக் குறையாக அவளது கதையைக் கூறினாள், " நான் பெரிய தப்புப் பண்ணிட்டேண்டி; 'கண்கெட்டபின் சூரிய நமஸ்காரம்' கிற மாதிரி, இப்போதான் எனக்குத் தெரிய வருது. கண்டிப்பா ஒரே வயசுல இருக்கிறவங்க கல்யாணம் செஞ்சுக்கக் கூடாது, அப்படி செஞ்சுக்கிட்டா ஏகப்பட்ட பிரச்னைகள் வரும்; சண்டைகள் வரும். அப்படிச் சண்டை வரும்போது நீமட்டும் செய்யலாம் , நான் செய்யக் கூடாதானு ரெண்டு பேரும் ஏட்டிக்குப் போட்டியாப் பேசி பிரச்னை பெருசாகும். இதே ரெண்டு பேருக்கும் இடையில வயசு வித்தியாசம் இருந்தா, யாராவது ஒருத்தர் அட்ஜஸ்ட் பண்ணிட்டுப் போற மாதிரி இருக்கும், இந்த மாதிரி சண்டைகள் வரும்போது, சின்னப்பொண்ணு தானேனு கணவர் விட்டுக்கொடுப்பார்; மனைவியும் வயதுக்கு மரியாதை கொடுத்து, நம்மவிடப் பெரியவங்கனு மதிச்சு நடந்துக்குவாங்க. ஆனா, நாங்க ஒரே வயசுங்கிறதால, எங்களுக்குள்ள அப்படி விட்டுக்கொடுக்கிற மனப்பக்குவம் ரெண்டு பேருக்குமே இல்லை.


              நம்மை நம்பி வந்தவளை மனசுக்கஷ்டப்படுத்தாம வச்சுக்கணும்னு அவருக்குத் தோணவேயில்லை. காதலிக்கும்போது, எல்லாரையும் மாதிரி, ' உன்னைக் கண் கலங்காமப் பாத்துக்குவேன்,கஷ்டப்படாம வச்சுக்குவேன்; நல்லாப் பாத்துக்குவேன்;
என்னை நம்பு' னு வழக்கமான டயலாக்குகள் எல்லாம் சொன்னார். இதெல்லாம் எப்படியோ, கல்யாணத்துக்கப்புறம் எனக்கு எல்லாமே அவர்தான்னு நம்பி, அவரோட, அவர் வேலை செஞ்சுகிட்டிருக்கிற ஊருக்குப் போனேன். ஆனா, அத அவர் புரிஞ்சிக்கல. கல்யாணமான மறுநாள்ல இருந்தே, காரணமே தெரியாமல் நான் புறக்கணிக்கப்பட்டேன். மிகக் கொடுமையான தண்டனை புறக்கணிப்புதான்; நம்மைக் கண்டுக்காம விட்டுறதுதான். அதை அனுபவிச்சவங்களுக்கு கண்டிப்பா அதன் வலி புரியும். ஆசை ஆசையா இதுக்குத்தானா, காதலிச்சுக் கல்யாணம் பண்ணிக்கிட்டோம்னு தோணுச்சு. யாருமே, கூட இல்லாத வீட்டில், பகல் பூரா இத நெனச்சு அழுதுகிட்டிருப்பேன். ஏன் என் கூடப் பேசாம, புறக்கணிக்குறீங்கன்னு கேட்டா, ' இவ்ளோ நாள் உங்கூடப் பேசுனது பத்தாதா?' னு கேட்பார். இப்படியே நான் அழுது கேட்டதால், கொஞ்சம் அவர மாத்திக்கிட்டார். ஆனாலும் அடுத்து, ஏதாவது சண்டை வந்தா, ' நீ என்னோட சுதந்திரத்தப் பறிச்சுக்கிட்ட; அழுது, அழுது உன் காரியத்த சாதிச்சுக்கிற' னு சொல்வார். சண்டை வந்துட்டா, அவர் வாயிலிருந்து வரும் வார்த்தைகள் ஒவ்வொண்ணும் ஈட்டி மாதிரி விழுந்து நம்ம மனசக் குத்தும். எத்தனையோ தடவ. ' கையால அடிச்சாக்கூட வலி கொஞ்சநாள்ள மறஞ்சுடும்; வார்த்தைகளாலக் காயப்படுத்தாதீங்க' னு கெஞ்சுவேன். ஆனா அவர் அத கேட்கவே இல்ல.


                 காதலிச்சுக்கிட்டிருக்கும்போது, ' நம்ம ரெண்டு பேரும் வேற, வேற கலாச்சாரத்துல வளர்ந்தவங்க; கல்யாணத்துக்கப்புறம் ஒத்துவருமா?'னு நான் கேட்டப்போ, ' இதெல்லாம் ஒரு பெரிய விஷயமா? எத்தனையோ பேர் சாதி மாறி, மதம் மாறி கல்யாணம் செஞ்சுக்கிட்டவங்க ஒற்றுமையா வாழலையா?' னு எனக்கு ஆறுதல் சொன்னார். ஆனா, கல்யாணத்துக்கப்புறம் அந்த மாதிரி நடந்துக்கவேயில்ல; சமையல்ல இருந்து எல்லாத்துக்கும் குற்றம் சொல்ல ஆரம்பிச்சார். அவர்தான, அவங்க குடும்பம் பத்தியும், கலாச்சாரம் பத்தியும் எனக்குப் புரியவைக்கனும். அத விட்டுட்டு, ' நீ ஏன் அப்படி நடந்துக்கல?' னு சண்ட போடுறார். எந்த ஒரு விஷயத்துக்கும் என்னை Support பண்ணல. இப்படியே போய்கிட்டிருந்த எங்க வாழ்க்கையில குழந்தையும் பிறந்துச்சு" எனத் தனது கதையைத் தோழி சொல்லிக்கொண்டிருந்தாள். இன்னும் அவளது கதை ரொம்ப நீளமாக இருந்ததால், மீதியை அடுத்தப் பதிவில் எழுதுகிறேன்.
Related Posts with Thumbnails