பாட்டி...

திங்கள், மார்ச் 28, 2011

               
                    பாட்டி- அம்மாவின் அம்மா.
சிலருக்கு ஆச்சி,ஆயா,ஆத்தா, அம்மம்மா. ஆனால் எங்களுக்கு
பாட்டி. அவங்க எட்டு பேருக்கு அம்மா. ஒரு டஜன் பேரக்
குழந்தைகளுக்கு பாட்டி. பொதுவாக எல்லாருக்குமே பாட்டி
என்றால் ரொம்பப் பிடிக்கும்.  அதிலும் எனக்கும் என்
தங்கைக்கும் அப்பாவினுடைய அப்பா, அம்மா இல்லாததால்
அவங்க ஒருத்தர்தான் பாட்டி. அதனால் அவங்க எப்பவும்
எங்களுக்கு ஸ்பெஷல்தான்.

            ஒவ்வொரு வருஷமும் சம்மர் லீவுக்கு நாங்க போறது
பாட்டி வீட்டுக்குத்தான். அதற்காக ஒவ்வொரு வருஷமும்
காத்திருப்போம். நாங்க லீவுக்கு வர்றோம் என தெரிந்ததும்
பலகாரங்கள் நிறைய செய்து வச்சிருப்பாங்க. பாட்டி வீட்டுக்குப்
போனதும், பாட்டி, முதுகையும் , தலையையும்  தடவிக் 
கொடுத்து, அணைத்து வீட்டுக்குள்ள கூட்டிகிட்டு போவாங்க. 
அவங்க பக்கத்துல உட்கார்ந்தாலோ, மடியில படுத்தாலோ 
அவங்க எங்களோட தலையை தடவிக் கொடுக்குற சுகமே
தனிதான்.  பாட்டினாலே ஞாபகத்துக்கு வர்றது, அவங்களோட 
25 பைசா அளவுள்ள குங்குமப் பொட்டும், மூக்கின் இரண்டு 
பக்கமும் உள்ள கல் வைத்த மூக்குத்தியும்தான். அதுவே 
அவங்களுக்கு அழகு. ஏதாவது கல்யாணத்துக்கு பாட்டி 
கிளம்பும்போது, பட்டுப்புடவை கட்டி கொண்டையை சுற்றி பூ 
வைத்து கிளம்பும் அழகே தனிதான். அதேபோல அவங்க 
பொறுமையா செருப்பு போடுவதைக் கூட பார்த்துக்கொண்டே
இருக்கலாம்.

           ஒருமுறை பாட்டி எங்க வீட்டுக்கு வந்திருந்த போது,
அவங்களுடன் டிவியில் படம்  பார்த்துட்டு இருந்தேன். அப்போ
பாட்டி இந்தப் படம் எங்க வீட்டு டிவிலயும் வரும்னு
சொன்னாங்க. அந்த அளவுக்கு ரொம்ப வெள்ளந்தியானவங்க.
அதிர்ந்து யார்கிட்டயும் பேசமாட்டங்க. நான் வளர்ந்ததும்,
எனக்கு சந்தோஷமான விஷயம், பாட்டி என்னைவிட உயரம்
குறைவு என்பதுதான். நான் அவங்களவிட வளர்ந்திருந்தேன்.
இது எனக்கு ரொம்ப ரொம்ப மகிழ்ச்சியாக இருந்தது. ஏனெனில்,
மற்ற எல்லாரும் என்னைவிட உயரம் அதிகம் என்பதுதான்.
அவங்களுக்கு பிடிச்சது அல்வாவும், கோவிலுக்குப்
போவதும்தான். இன்னும் பாட்டியைப் பற்றி நிறைய
சொல்லலாம். இவ்வளவு பிடிச்ச பாட்டி, நாலு வருஷத்துக்கு
முன்னாடி இதே நாள்தான் எங்க எல்லாரையும்விட்டு
பிரிந்து போனாங்க. இன்னைக்கு பாட்டி வீடும் இல்லை;
பாட்டியும் இல்லை. ஆனால் நினைவுகள் மட்டும் நீங்காமல்
இருக்கிறது.

8 comments:

முத்துலெட்சுமி/muthuletchumi சொன்னது…

ம். நினைவாஞ்சலி..

பாட்டிய விட உயரம்.. மத்தவங்களவிட.. :))
நீங்க நம்ம செட்

ஜெய்லானி சொன்னது…

இப்ப நீங்க நினைச்சது பாட்டிக்கு கேட்டிருக்கும் :-)

Chitra சொன்னது…

பாட்டினாலே ஞாபகத்துக்கு வர்றது, அவங்களோட
25 பைசா அளவுள்ள குங்குமப் பொட்டும், மூக்கின் இரண்டு
பக்கமும் உள்ள கல் வைத்த மூக்குத்தியும்தான். அதுவே
அவங்களுக்கு அழகு. ஏதாவது கல்யாணத்துக்கு பாட்டி
கிளம்பும்போது, பட்டுப்புடவை கட்டி கொண்டையை சுற்றி பூ
வைத்து கிளம்பும் அழகே தனிதான். அதேபோல அவங்க
பொறுமையா செருப்பு போடுவதைக் கூட பார்த்துக்கொண்டே
இருக்கலாம்.


......அவர்களை நேரில் பார்த்தது இல்லை என்றாலும், நீங்கள் சொல்லி இருப்பதை பார்க்கும் போது, இவரை சந்திக்காமல் போய் விட்டோமே என்ற எண்ண வைக்கும் அளவுக்கு பதிவின் தாக்கம் இருக்கிறது. May her soul rest in peace.

அமுதா கிருஷ்ணா சொன்னது…

என் அவ்வாவும் இப்படி தான் பெரிய குங்குமம்,மூக்குத்தி என்று அந்த கால ஸ்டைலில்.நினைவு படுத்திவிட்டீர்கள்.

சாந்தி மாரியப்பன் சொன்னது…

ஆச்சி வீட்டு சுகமே தனி..

குறையொன்றுமில்லை. சொன்னது…

பாட்டிக்கு நிறைவான நினைவு அஞ்சலி.

Rathnavel Natarajan சொன்னது…

நல்ல பதிவு.
வாழ்த்துக்கள்.

Unknown சொன்னது…

வாங்க முத்துலெட்சுமி,
ஜெய்லானி,
சித்ரா,
அமுதா கிருஷ்ணா,
அமைதிச்சாரல்,
லக்ஷ்மி அம்மா,
ரத்னவேல் ஐயா
தங்கள் வருகைக்கு நன்றி.

கருத்துரையிடுக

Related Posts with Thumbnails