தீபாவளிக் கொண்டாட்டம்...

புதன், அக்டோபர் 27, 2010

               தீபாவளிக்கு இன்னும் எட்டு நாட்களே உள்ளன.
ஒரு மாதத்திற்கு முன்பிருந்தே கொண்டாட்டங்கள் ஆரம்பித்து
விட்டன. தீபாவளிக்குப் பொருட்கள் வாங்க எங்குபார்த்தாலும்
கூட்டம். இதனால் வாகன நெரிசல். சென்னையில் தி.நகரில்
மக்கள் கூட்டம் அலைமோதுவதாக செய்திகளிலெல்லாம்
காண்பிக்கிறார்கள். இது சிறுஊர்களையும் விட்டு வைக்கவில்லை.


            
             ஒரு மாதத்திற்கு முன்பிருந்தே எல்லாக் கடைகளிலும்
சலுகைகளும், தள்ளுபடிகளும் ஆரம்பித்துவிட்டது. துணிக்
கடைகள் மட்டுமல்லாமல் நகைக்கடைகள், எலக்ட்ரானிக்
கடைகள் என எல்லாக்கடைகளிலும் தீபாவளி விற்பனை
ஆரம்பித்துவிட்டது. ஆனால் இவற்றில் எத்தனை
உண்மையான விற்பனை எனத் தெரியவில்லை. 2 சட்டை
வாங்கினால் 2 சட்டை இலவசம்; 1 புடவை வாங்கினால்
1 புடவை இலவசம் எனத் துணிக்கடைகளிலும், 1சவரன்
வாங்கினால் 1கிராம் தங்கநாணயம் என நகைக்கடைகளிலும்,
டிவி வாங்கினால் டிவிடி ப்ளேயர் இலவசம் என எலக்ட்ரானிக்
கடைகளிலும் விற்கிறார்கள். இது போன்ற பண்டிகை காலச்
சலுகைகள் தமிழ்நாட்டில் மட்டும்தான் மிக அதிகமாக
இருக்கிறது. ஆடித்தள்ளுபடி, தீபாவளித் தள்ளுபடி, பொங்கல்
சிறப்புத் தள்ளுபடி என இப்படி ஏகப்பட்ட பண்டிகைச் சலுகைகள்
மக்களைக் குறிவைத்து ஏமாற்றும் வண்ணமே உள்ளது.

              இதுபோல பண்டிகைக்காலச் சலுகைகளில் வாங்கும்
பொருட்கள் பெரும்பாலும் தரக்குறைவாகவும், பழைய மற்றும்
விற்காத பொருட்களாகவுமே இருக்கின்றன. இதனால் எளிதில்
கிழிந்தும், உடைந்தும் போகின்றன. நகைகளில் கூட தங்கத்தில்
கலப்படம் செய்து தயாரிக்கப்படுகிறது. இதுபோன்ற சலுகைகளில்
வாங்கப்படும் நகைகள் பெரும்பாலும் சுத்தமான தங்கமாக
இருப்பதில்லை; கறுத்துப் போய்விடுகின்றன. எனினும்
இச்சலுகைகள் எளிதில் மக்களைக் கவரும் வண்ணம் உள்ளதால்,
மக்கள் இதுபோல ஏமாந்தும் திருந்துவதில்லை. பண்டிகை
காலச்சலுகை, விழாக்காலச் சலுகை என வெவ்வேறு
பெயர்களில் ஏமாற்றுகிறார்கள். இதை ஒரு விதத்தில்
திருட்டுத்தனம் என்றே சொல்லலாம்.






              இவ்வாறானத் தள்ளுபடிகள் ஒருபுறம் என்றால்,
அத்தியாவசியப் பொருட்களான மளிகைப்பொருட்கள்,
காய்கறிகள் இவற்றின் விலைகள் தீபாவளியை முன்னிட்டு
தாறுமாறாக உயர்ந்துள்ளது. சாதாரண நாட்களில்,
குறைந்த அளவு காய்கறிகள் வாங்கினாலே, 100ரூபாய்
ஆகிவிடுகிறது. இப்போது கேட்கவே வேண்டாம். இதேபோல
எண்ணெய் வகைகளும், பருப்பு வகைகளும் கூட விலை
உயர்ந்துள்ளது. இதற்கு 50சதவீதம் எண்ணெய் வகைகள்
வெளிநாடுகளிலிருந்து இறக்குமதியாவதாகக் காரணம்
கூறுகிறார்கள்.


            இந்தப் பொருட்களின் விலை உயர்வால்,
இனிப்புகளின் விலையும் உயர்கிறது. சாதாரண நாட்களில்
விற்பதைவிட தீபாவளிக்காக, இருமடங்கு விலை அதிகம்
வைத்து விற்கிறார்கள். இதை வாங்க வரிசையில் வேறு
நிற்கவேண்டி இருக்கிறது. பிரபல இனிப்புக்கடைகளில்
எல்லாம் தீபாவளியையொட்டி, பலகாரங்கள் வாங்குவதற்கு,
முன்பதிவு செய்ய வேண்டியுள்ளது. முன்பெல்லாம் எல்லா
வீடுகளிலும் ஒரு மாதத்திற்கு முன்பிருந்தே, தீபாவளிப்
பலகாரங்கள் செய்ய ஆரம்பித்துவிடுவார்கள். ஆனால்
இப்போது நேரமின்மையால், பெரும்பாலும் யாரும்
செய்வதில்லை. கடைகளிலேயே வாங்குவதால், இதையே
சாக்காக வைத்து, அவர்கள் விலையை உயர்த்தி விடுகிறார்கள்.





               இதுபோலத்தான் பட்டாசுக்கடைகளிலும்.
200ரூபாய்க்குக் குறைந்து வெடிப்பார்சலே இல்லை. அவற்றை
அந்தப் பட்டாசு செய்பவர்களால் கூட வாங்க முடியாத நிலை
உள்ளது. ஸ்ரீவில்லிப்புத்தூரில் எங்கள் வீட்டிற்குப் பக்கத்தில்
நிறைய பேருக்கு பட்டசு செய்வதுதான் முக்கியத் தொழில்.
பட்டாசுகளை வீட்டிலேயும், பட்டாசுத்தொழிற்சாலைக்குச்
சென்றும் செய்கிறார்கள். தீபாவளி சமயங்களில் அவர்களுக்கு
ஞாயிற்றுக்கிழமைகளில் கூட பட்டாசுத்தொழிற்சாலைகளில்
வேலை இருக்கும். ஆனால் அவர்களால் கூட ஆசைப்பட்ட
பட்டாசுகளை வாங்க முடியாது. இதுபோலத்தான்
துணிக்கடைகளில் வேலை பார்ப்பவர்களது நிலைமையும்.
இப்படித்தான் வருடாவருடம் தீபாவளி நமக்குத் தெரிந்தும்
தெரியாமல் கொண்டாடப்படுகிறது. தீபாவளி மட்டுமல்ல;
கிட்டத்தட்ட எல்லா விழாக்களுமே இப்படித்தான்
கொண்டாடப்படுகிறது, இருப்பவர்களால் சிறப்பாகவும்,
இல்லாதவர்களால் முடியாமலும்.

21 comments:

வெங்கட் நாகராஜ் சொன்னது…

தீபாவளி - இருப்பவர்களுக்குக் கொண்டாட்டம், இல்லாதவர்களுக்குத் திண்டாட்டம். தில்லியிலும் தள்ளுபடி ஏமாற்றுதல்கள் உண்டு. நல்ல பகிர்வுக்கு நன்றி.

RVS சொன்னது…

இப்போதுதான் பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் அத்தியாவசியமாகிறது. தீபா 'வலி' ஆகாமால் தீபாவளியாக கொண்டாடவேண்டியது எல்லாருடைய பொறுப்பு. நல்ல கட்டுரை. ;-)

ஜெயந்த் கிருஷ்ணா சொன்னது…

கையில் காசு இருப்பவர்களுக்கு கொண்டாட்டம், இல்லாதவர்களுக்கு திண்டாட்டம் தான்...

stella சொன்னது…

Nice picture nice message

Chitra சொன்னது…

பகட்டுக்காக கொண்டாட விளம்பரங்கள் அழைக்கின்றன. வேறு என்ன?

விநாயகதாசன் சொன்னது…

//எல்லா விழாக்களுமே இப்படித்தான் கொண்டாடப்படுகிறது
இருப்பவர்களால் சிறப்பாகவும்
இல்லாதவர்களால் முடியாமலும்//
கடைசி வரிகள் இந்த கட்டுரையின்
கனம் கூட்டுகிறது
அருமை

Asiya Omar சொன்னது…

அருமையான பகிர்வு.

ராமலக்ஷ்மி சொன்னது…

அருமையான ஆய்வு ஜிஜி.

முத்துலெட்சுமி/muthuletchumi சொன்னது…

தில்லியில் பொதுவாக தீபாவளிக்குன்ன்னு தள்ளுபடி இருப்பதில்லயே..
குளிர் முடிஞ்சது குளிராடை ஸேல்..
வெயில் முடிந்ததும் வெயிலாடை ஸேல்.. நல்லாவே தெரியுமே கழிச்சு கட்டத்தான் செய்யறாங்கன்னு..:)

Unknown சொன்னது…

வாங்க...
வெங்கட் நாகராஜ்
RVS
வெறும்பய.
தங்கள் கருத்துக்கு நன்றி.

Unknown சொன்னது…

வருகைக்கு நன்றி
ஸ்டெல்லா
சித்ரா
விநாயகதாசன்
ஆசியா
ராமலக்ஷ்மி
முத்துலெட்சுமி

துளசி கோபால் சொன்னது…

இருப்பவன் கொண்டாடிக்கிட்டுப் போகட்டுமுன்னு விடலாமுன்னா.....
இந்த தொலைக்காட்சிகளில் வரும் விளம்பரம் சாதாரண மக்களைச் சும்மா விடுமா????

நகையும் நட்டும், பட்டும் பீதாம்பரமுமா விடாமக் காமிச்சுக்கிட்டே இருக்காங்க. ரெண்டு நிமிசம் நிகழ்ச்சின்னா பத்து நிமிசம் விளம்பரம். வீட்டு வீட்டுக்கு 'இலவச' தொலைக்காட்சி பொட்டி வந்தபிறகு இதையெல்லாம் பொழுதன்னிக்கும் பார்க்கும் 'இல்லாத' மக்களுக்கு எப்படி இருக்குமுன்னு நினைச்சுப் பாருங்க.........

அதுவும் ஒரு பட்டுப்பொடவை விளம்பரத்துலே....... வெண்தோல் மங்கையர் உடுத்தி ஆனந்திக்க...... கறுந்தோல் மங்கையர் அவுங்களைச் சுத்திக் கைகூப்பி வணங்கி மண்டி போடறாங்க. முகம் உள்பட கறுப்புப்பெயிண்ட் அடிச்சு வச்சுருக்கு இவுங்களுக்கு:(

இதெல்லாம் ந்ன்ன நியாயமுன்னு தெரியலை:(

சாந்தி மாரியப்பன் சொன்னது…

இங்கியும் தள்ளுபடி உண்டு. தீபாவளி இங்கே அஞ்சு நாள் கொண்டாடப்படுது. முதல் நாளான தந்தேரஸ்க்கு ஏதாவது வாங்கியாகணும். அதை இவங்கல்லாம் நல்லா உபயோகப்படுத்திக்கிறாங்க :-( .

(உண்மையில் அன்னிக்கு உப்பு வாங்கினா லட்சுமியே வீட்டுக்கு வர்றதா ஐதீகம்)

Aathira mullai சொன்னது…

இப்போதுதான் பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் அத்தியாவசியமாகிறது. தீபா 'வலி' ஆகாமால் தீபாவளியாக கொண்டாடவேண்டியது எல்லாருடைய பொறுப்பு. நல்ல கட்டுரை. இப்பவே தீபாவளி கொண்டாடிய மகிழ்ச்சி..பகிர்வுக்கு நன்றி ஜிஜி;-)

Unknown சொன்னது…

வாங்க துளசி கோபால்.
ரொம்ப சரியாகச் சொல்லியிருக்கீங்க.
நூற்றுக்கு நூறு உண்மை.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க.

Unknown சொன்னது…

வாங்க அமைதிச்சாரல்.
பொதுவா அட்சய திரிதியை அன்றைக்கு தான் தங்கம் வாங்க முடியாதவங்க உப்பு வாங்கினா லட்சுமி வீட்டுக்கு வர்றதா ஐதீகம்னு
சொல்லுவாங்க.
கருத்துக்கு ரொம்ப நன்றிங்க.

Unknown சொன்னது…

வாங்க ஆதிரா.
வருகைக்கு ரொம்ப நன்றிங்க.

அழகி சொன்னது…

சாதாரண மக்கள் வாங்கக்கூடிய அத்தியாவசியப் ​​பொருட்களின் வி​லை உயர்வுதான் மிகுந்த எரிச்ச​லைத் தருகிறது..

பதிவு யதார்த்தம்.

சாந்தி மாரியப்பன் சொன்னது…

//பொதுவா அட்சய திரிதியை அன்றைக்கு தான் தங்கம் வாங்க முடியாதவங்க உப்பு வாங்கினா லட்சுமி வீட்டுக்கு வர்றதா ஐதீகம்னு சொல்லுவாங்க.//

வடக்கே உள்ளவங்களுக்கு தந்தேரஸும் அப்படித்தான். ராஜஸ்தான் மக்களோட ஐதீகப்படி, அன்னிக்கு விளக்குமாறும் வாங்கணும். சொன்னா நம்பமாட்டீங்க.. அவங்களோட பூஜையில் விளக்குமாறுக்கும் இடம் உண்டு. என் தோழிவீட்டில் பார்த்திருக்கேன் :-)))))

Unknown சொன்னது…

வாங்க அழகிரி.
வருகைக்கு ரொம்ப நன்றிங்க.

Unknown சொன்னது…

//வடக்கே உள்ளவங்களுக்கு தந்தேரஸும் அப்படித்தான். ராஜஸ்தான் மக்களோட ஐதீகப்படி, அன்னிக்கு விளக்குமாறும் வாங்கணும். சொன்னா நம்பமாட்டீங்க.. அவங்களோட பூஜையில் விளக்குமாறுக்கும் இடம் உண்டு. என் தோழிவீட்டில் பார்த்திருக்கேன் :-))))) //

இந்தத் தகவல் எனக்குப் புதுசுங்க.
தகவலுக்கு நன்றி அமைதிச்சாரல்.

கருத்துரையிடுக

Related Posts with Thumbnails