மனித வணக்கம்

சனி, செப்டம்பர் 11, 2010

           
                நடிகர். திரு. கமல்ஹாசன் அவர்கள் சினிமாத்துறையில் , நடிப்பில் மட்டுமல்லாமல் அனைத்திலும் திறமை மிக்கவர்; ஈடுபாடு உள்ளவர் என்பதுதான் நானறிந்த விஷயம். ஆனால் அவர் பிற துறைகளிலும் ஆர்வம் உடையவர் என்பதை சமீபத்தில் அவரது கவிதை ஒன்றைப் படித்ததன் மூலமாகத் தெரிந்துகொண்டேன்.
மனித உறவுகளைப் பற்றி அவரெழுதியுள்ள அந்தக் கவிதை:

தாயே. என் தாயே!
நான்
உரித்த தோலே
அறுத்த கொடியே
குடித்த முதல் முலையே,
என் மனையாளின்
மானசீகச் சக்களத்தி, சரண்.

தகப்பா, ஓ தகப்பா!
நீ, என்றோ உதறிய மை
படர்ந்தது கவிதைகளாய் இன்று
புரியாத வரியிருப்பின் கேள்!
பொழிப்புரை நான் சொல்லுகின்றேன்.

தமயா, ஓ தமயா!
என் தகப்பனின் சாயல் நீ
அச்சகம் தான் ஒன்றிங்கே
அர்த்தங்கள் வெவ்வேறு.

தமக்காய், ஓ தமக்காய்!
தோழி, தொலைந்தே போனாயே
துணை தேடிப் போனாயோ?

மனைவி, ஓ காதலி!
நீ தாண்டாப் படியெல்லாம்
நான் தாண்டக்குமைந்திடுவாய்
சாத்திரத்தின் சூட்சுமங்கள் புரியும்வரை.

மகனே, ஓ மகனே!
என் விந்திட்ட விதையே
செடியே, மரமே, காடே
மறுபிறப்பே
மரண சௌகர்யமே, வாழ்!

மகளே, ஓ மகளே!
நீயும் என் காதலியே
எனதம்மை போல...
எனைப்பிரிந்தும் நீயின்பம் காண்பாயா?
இல்லை
காதலித்த கணவனுக்குள் எனைத்
தேடுவாயா?

நண்பா, ஓ நண்பா!
நீ செய்த நட்பெல்லாம்
நான் செய்த அன்பின் பலன்
இவ்விடமும் அவ்விதமே.

பகைவா, ஓ பகைவா!
உன் ஆடையெனும் அகந்தையுடன்  
எனதம்மணத்தைக் கேலி செய்வாய்.
நீ உடுத்தி நிற்கும் ஆடைகளே
உனதம்மணத்தின் விளம்பரங்கள்.

மதமென்றும் , குலமென்றும்
நீ வைத்த துணிக்கடைகள்
நிர்மூலமாகிவிடும்
நிர்வாணமே தங்கும்.

வாசகா, ஓ வாசகா!
என் சமகால வாசி,
வாசி!
புரிந்தால் புன்னகை செய்.
புதிரென்றால் புருவம் உயர்த்து.
பிதற்றல் எனத்தோன்றின்
பிழையும் திருத்து.
எனது கவி உனதும்தான்.

ஆம்,
நாளை உன் வரியில்
நான் தெரிவேன்.

 









1 comments:

கடல் சொன்னது…

பதிவை மகளிர் கடலில் இணைத்ததற்கு நன்றிகள்.
உங்கள் தளமும் இணைக்கப்பட்டுவிட்டது.

கருத்துரையிடுக

Related Posts with Thumbnails